பக்கம்:கனிச்சாறு 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  95


69 தமிழ்ப் பயிரில் இந்தித் தீ!

செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் இந்தியெனும்
செந்தீயை மூட்டி விட்டே,
அழிக்கின்றார் தமிழினத்தை! ஆரென்று
கேட்பதற்கோ ராளிங் கில்லை!
மொழிக்கின்று வந்தநிலை தவிர்க்கிலமேல்
தமிழ்நாட்டை அடிமை சூழும்!
ஒழிக்கின்ற சூளுடனே கொல்களிறு
போல் எழுந்து முனைவீர் இன்றே!

-1963


70  தமிழா, எப்படி ?

என்னபடி மக்களெல்லாம் எதிர்த்தாலும்,
தமிழ்நாட்டில் இந்தி யைத்தாம்
சொன்னபடி புகுத்துவதே முதற்படியாய்
வடநாட்டார் கொண்டு விட்டார்!
அன்னபடி நடந்திடவே அமைச்சரெல்லாம்
அடிபணிந்தார்! தமிழா, இன்னும்
இன்னபடி நீ கிடந்தால் எப்படித்தான்
மேற்படியை எட்டு வாயோ?

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/122&oldid=1513160" இலிருந்து மீள்விக்கப்பட்டது