பக்கம்:கனிச்சாறு 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 கனிச்சாறு – முதல் தொகுதி


ஆண்டுகொண் டிருக்கும் அரசுப்பட் டாளம்
மாண்டுகொண் டிருக்கும் தமிழரை மதிக்க
மீண்டுகொண் டிருக்கும் உரிமை உணர்வினைத்
தூண்டுங் கோலென என்சிறை துலங்குக!

ஒற்றுமை பேசி உரிமையை மறுக்கும்
வெற்றுரை அரசின் வீண்செய லெல்லாம்
குற்றுமி போலத் தமிழர்முன் குலைக!
மற்று அவர் ஆட்சி மண்ணுள் புதைக!

இனியுந் தமிழர் எழாமற் போயின்
கனிந்திடும் உரிமைக் கனிச்சுவை நுகரார்!

மலர்ந்திடும் தமிழக மாட்சிமை அறியார்!
உலர்ந்திடுஞ் சருகா உதிர்ந்திழிந் தழிவார்!

இறுதியாய்த் தமிழரை ஒன்று வேண்டுவேன்!
உறுதி உளத்துடன் பன்முறை உன்னுக!

தமிழ்மொழி தாழ்ந்தால் தமிழினம் வாழுமா?
தமிழ்மொழி சிதைந்தால் தமிழர் உயர்வரா?
இந்திய அரசினர் இந்தி மொழிக்குத்
தந்த உயர்வு தமிழ்க்குவேண் டாவா?

மொழிச்சிறப் பழித்து மொழியுணர் வழித்தால்
எழுச்சி யின்றித் தமிழினம் இன்றினும்
அடிமை யுற்றுத் தாழ்ந்தழி யாதா?
மிடிமை முற்றும் மீண்டும் வராதா?

ஆகலின் தமிழரே தமிழ்உணர் வாக்குக
சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது?
செந்தமிழ் தந்தது சிறையெனில் இதனினும்
எந்தமிழ் உள்ளம் எதற்கினி மகிழும்?
வீழாது தமிழ்ப்பயிர் விளையத்
தாழாது வித்துக தமிழைத் தமிழரே!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/125&oldid=1419231" இலிருந்து மீள்விக்கப்பட்டது