பக்கம்:கனிச்சாறு 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮

கனிச்சாறு முதல் தொகுதி


30.அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ்மொழியில் அக்கறையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் 1967இல் தமிழரசின் சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ஒருவர் கொச்சைத் தமிழில் தினத்தந்தி, ராணி என்னும் இதழ்களை நடத்தித் தமிழைக் கெடுப்பவராக இருக்கிறாரே என்று அந்நிலையை, இழித்துக் கூறியது.
31. 'அகத்தில் ஒளி பெருகி, மருள் விலகி, புதுமைபெறும் வாழ்வு' என்று பாவலரேறு விளக்குவதெல்லாம் தமிழ் படித்தால் கிடைக்கும் நலன்களே.
32.'தமிழனைத் தமிழனே தலையறுக்கின்றான். மிகக் கொடிய இந்நிலை மாற வேண்டும். தமிழ் எனும் ஒரு கூட்டினுள் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும்' என்று முழங்குகிறது இது.
33. 'தமிழ் வாழ்க!' என்று உரக்க முழங்குவதிலும், பட்டிமன்றம் வைத்து வழக்கிடுவதிலும், பாட்டரங்கில் இசைப்பதிலும் தமிழ் வாழாது: தமிழ் கற்ற அறிஞர்களைப் போற்றுங்கள்: புரந்து நில்லுங்கள்; தூயதமிழைப் பேசுங்கள். அறிவியல், கலை, அனைத்தையும் தமிழ் ஆக்குங்கள். அப்பொழுதுதான் தமிழ் நிலைத்து வாழும்' என்கிறது இப்பாட்டு, 34. அறிவியலைக் கற்கத் தாய்மொழிக்கே முதற் சலுகை தரவேண்டும் என்று விளக்குகின்ற பாடல் இது.
35. தமிழ்நாட்டில் தமிழில் படிப்பதுதானே முறை?
36. தமிழைக் கெடுக்கும் இதழ்களைக் கண்டித்தது.
37. சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டுப் பிராமணர் இந்தியத் திரவிட மொழியியல் ஆராய்ச்சித் துறைக்குத் தலைமை தாங்கினார். அவர் பல வழிகளிலும் தமிழ்மொழிக்குக் கிடைத்த உண்மை நலன்களையெல்லாம் மட்டந்தட்டி வந்தார். சமற்கிருத மொழியையே தலைமேல் வைத்து மறைமுகமாகப் பாராட்டி வந்தார். அவருக்குக் கையாளாகத் தமிழகத்திலிருந்து செயற்பட்டு வந்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியராகவிருந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். அதனால் அவர்க்கு அரசுச் சார்பில் பலவகை நலன்களும் கிடைத்து வந்தன. ஒருமுறை சட்டர்சி ஒரு கருத்தரங்கில் ‘சமற்கிருத மொழியின்றித் தமிழ்மொழி இயங்காது' என்னும் உண்மைக்கு மாறான பொய்க் கருத்தைக் கூறியதுமன்றித் தம் கருத்துக்குத் துணைநிற்கும் தெ. பொ. மீயையும் வானளாவப் பாராட்டியுரைத்தார். அக்கால் எழுதியது இப்பாடல்.
38. தூய உணர்வுகளையும் வினைகளையுமே ஆசிரியர் கைக்கருவிகளாகக் கொண்டிருப்பதால் தமிழ்ப் போராட்ட முயற்சிகளில் வெற்றியே கிட்டும் என்பது.
39.ஆங்கில மொழியைப் பிழையின்றியும் சிறப்பாகவும் அக்கறையுடனும் பேச விரும்பும் தமிழர், தமிழ்மொழியை மட்டும் பிழையாகவும் கலப்பாகவும் பேசுவானேன்? தூய்மையான தமிழை வளர்க்காத - எழுதாத இதழ்களைத் தீயிட்டுப் பொசுக்குதல் வேண்டும் என்கிறது இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/19&oldid=1513500" இலிருந்து மீள்விக்கப்பட்டது