பக்கம்:கனிச்சாறு 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦

கனிச்சாறு முதல் தொகுதி

வாழ்க்கை, தொண்டு, எழுத்து. பேச்சு, அறிவு. மூச்சு, நட்பு, விருந்து, வினை. நனவு. மறை, கனவு. மெய்ம்மம், இறைவன் என்னும் உயிர்க் கொள்கை இப்பாட்டில் ஒளிப்பிழம்பாய்த் திகழ்கிறது.
49.கயமையினை எழுத்தாக்கி எத்தனைப் பேர் காசு பணம் சேர்க்கின்றனர். அதனைக் கடுமையாகக் கடிவது இது.
50.பொதுத் தொண்டில் தனிமானம் கருதுதல் கூடாது; ஆரவாரம் கூடாது என்னும் கருத்தை யுணர்த்துவது இது.
51. தமிழர் எங்குத் துயரால் அடிமையுற்றிருக்கின்றனரோ, அங்கு என்னைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்த் தாயை வேண்டுவது.
52.தமிழக அரசியல் தலைவர்களிடம் அக்கால் இல்லாதிருந்த தமிழ்நல உணர்வு குறித்து எழுதப்பெற்றது இப்பாடல்.
53. தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நினைவையொட்டி அன்றைய ம.கோ. இரா. அரசு அறிவித்திருந்த எழுத்துச் சீர்திருத்த அறிவிப்பு எந்த அளவில் மொழிநலனில் அக்கறை கொள்ளாதது என்பதான அறிவிப்புப் பாடல்.
54. முந்தைய பாடலின் கருத்தடிப்படையிலேயேயான விளக்கப் பாடல். “சாதியாலும், மதத்தாலும், ஏழைமையாலும் - பிற ஓயாத தொல்லைகளாலும் நலிவுறும் கூட்டத்தைச் சீர்செய்ய வேண்டிய நிலையிருக்க எழுத்துத் திருத்தம்தான் தேவையா?” என்கிறார் பாவலரேறு.
55.நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் மறைவையொட்டி அவரின் புலமையொடு இக்காலப் புலவர்களின் கல்வியறிவுத் தேர்ச்சியின்மையை ஒப்பிட்டு எண்ணி வருந்திப் பாடியது. 56.தமிழ்நாட்டு விடுதலையை. தமிழின முன்னேற்றத்தை எண்ணத் தயங்குபவர்களைத் தூயதமிழிலாவது பேசுங்கள். அவ்வகையிலேனும் தமிழர் எனும் பெயர் தாங்குங்கள் என்பதிப் பாடல்.
57.பேச்சுத் தமிழையும், கலப்புத் தமிழையுமே தமிழ் எனப் பிதற்றியவர்களுக்குக் கண்டன அடியாய் அமைந்தது இப் பாடல்.
58. மதவெறித்தனமும், சங்கரப் பார்ப்பனக் கூட்டத்தின் கூச்சல்களும் மிகுந்த நிலையில் பாவலரேறு அவர்களின் வலியுறுத்தத்தால் திராவிடர் கழகம் வழிபாட்டுரிமை மாநாடு நடத்தியது. அக்கால் அக்கருத்திற்கு அழுத்தமாய் எழுந்தது இப் பாடல்.
59.'மநு' நூல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பாவலரேறு ஐயா அவர்கள் கோவை நடுவண் சிறையில் இருந்தபோது எழுதப் பெற்ற பாடல் இது. சிறையில் அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க. ஐயா அவர்கள், இசைகூட்டிப் பாடுமாறு எழுதிய பாடல். தமிழ்மொழியின் சிறப்புக் குறித்து விரிவாய்ப் பாடப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/21&oldid=1512916" இலிருந்து மீள்விக்கப்பட்டது