பக்கம்:கனிச்சாறு 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 கனிச்சாறு – முதல் தொகுதி

8  முத்தமிழைக் காப்போம் முனைந்து!

கற்றவரே! அன்பு கனிந்தவரே! செல்வச்சீர்
பெற்றவரே! இன்பம் பெறாமல் துடிப்பவரே!
சான்றோரை, நாட்டைச் சலியாது காப்பவரை
ஈன்றதாய் மாரே! இழிவறியா மங்கையரே!
தூய தமிழ்வளர்த்த தொன்மதுரைச் செம்புலிகாள்!
சாயாப் புகழ்காத்த சேரர் குலப்பிறப்பீர்!
சோழக் கொடிவழியீர்! சோர்வின்றிப் பூரிக்கும்
வேழத் தடந்தோள் விறல்மறவீர்! வேற்றுவர்க்கே
மேன்மேல் உழைத்து மிகுந்ததற்குக் கையேந்திக்
கூன்தங்கிப் போனவரே! கொப்புளிக்கும் நல்லுணர்வைச்
சாகடித்து விட்டுச் சாகா உரிமையினை
வேகடித்துத் தூங்குகின்ற வேங்கைத் தமிழ்மக்காள்!
கூற்றுவரே ஆனாலுங் கூப்பியகை யோடணைத்துப்
போற்றுந் தமிழ்மரபீர்! பொன்பொருளைத் தாமடையக்,
கற்றறிந்த செந்தமிழைக் காசுக்கே ஈடுவைத்துப்
பெற்றெடுத்த நாட்டைப் பெரும்பழிக்கே ஆளாக்கும்
கீழெண்ணங் கொண்டவரே! கேட்டுக் குழிக்குள்ளே
வீழென்னும் முன்னம் விழுந்திறக்கப் போவோரே!
வாடிக் குலைவதினும் வல்லுயிருக் காக் கடல்
ஓடிப் பிழைக்கும் உலகத் தமிழ்க்குலத்தீர்!

எல்லார்க்கும் யானொன் றியம்புகின்றேன்; மாந்தரிலே
நல்லார்க் கொருசொல் எனுங்கூற்றை நாடறியும்
ஆதலினால் எற்றுக்கும் ஆகாச் சிறுவனிதைக்
காதலினால் கூறலுற்றேன்! கன்னித் தமிழ்நாட்டீர்!
சேர்ந்தொருங்கே வாரீரோ! செந்தமிழர் கூட்டங்காள்!
நேர்ந்திருக்கும் உள்ள நெகிழ்வை அகற்றிவிட்டு,
நம்மை அரித்துவரும் நாற்சாதிப் பூசலெல்லாம்,
செம்மை ஒழுங்கில்லாச் சூழ்ச்சியெலாம் கட்டவிழ்த்தே
ஈன்றதாய் மேலாணை இட்டு, நமைக் காத்துவரும்
ஆன்ற மனைவிமேல் ஆணையிட்டுப் பெற்றெடுத்த
மூத்த பெரும்பிள்ளை முன்னேயோர் ஆணையிட்டுக்
காத்து வளர்த்ததமிழ்க் கன்னியின்மே லாணையிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/51&oldid=1419316" இலிருந்து மீள்விக்கப்பட்டது