பக்கம்:கனிச்சாறு 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  25

முன்னர் நமக்கிருந்த மொய்ம்புகழ்மே லாணையிட்டுத்
தென்னவருக் கோர்முடிவைத் தேர்ந்திடுவோம் வாரீரோ!
செல்வத்தால் கண்ணிழந்து, சென்றோரைத், தாங்கொண்ட
பல்வளத்தால் இன்பப் பரண்மேல் இருப்போரை,
யாவரையும் பார்த்தே இயம்புகின்றேன்! நாமெல்லாம்
ஆவதிலே கண்ணின்றி ஆளக் கருத்தின்றி
ஒற்றுமையு மின்றி உணர்வின்றி நாணமின்றி
வெற்றுரையைப் பேசி விளைவில் நினைவின்றிச்
சீரழிந்து விட்டோம்! சிறப்பிழந்தோம்! நாமிருக்கும்
நேரழிந்து விட்டோம்! நிலைகுலைந்தோம்! ஆதலினால்
ஊரழியு முன்னம், உருவழியு முன்னேயே
பேரழியு முன்னம், பிழையறிந்து வாரீரென்
றெல்லார்க்கும் கூறுகின்றேன்! ஏற்றதெனக் கண்டீரேல்
நல்லார் ஒருவர் தலைமையிலே நாமொருங்கே
கூடித் தமிழுயர்த்துங் கொள்கை வழிப்பட்டே
ஈடில்லை எங்கட்கென் றேற்ற குரல்கொடுப்போம்
வள்ளுவரைக் கற்றோம்! வளர்பயனைக் கண்டோமா?
தெள்ளுதமிழ் கற்றோர் திரள்பொருளைக் கண்டாரோ?
உற்ற நெறிநூல்கள் ஓரா யிரங்கோடி
பெற்றிருந்தும் நந்நெறியைப் பேணி வளர்த்தோமா?
பாரோர்க்குக் கூறிப் பலநூல்கள் தாமெழுதி
ஊரோர்க்குக் கூறி, ஒருநெறியுங் தாங்கொள்ளாப்
பெற்றியரை யன்றோ பெருமளவிற் காண்கின்றோம்!
குற்றியுமி குற்றிக் குவித்தோய்ந்து போனோமே!

“பாட்டன் பரணிருந்தான்; பாராண்ட வேந்தனவன்;
பாட்டனுக்குப் பாட்டன் பவள அரியணையில்
நீட்டிப் படுத்திருந்தான்! நேர்ந்துவிட்ட காலத்தால்
ஓட்டையொரு கட்டிலிலே ஒன்றி யிருக்கிறேன்!”
என்றுபல சொல்வாரை யார்மதிப்பார்! பேரறிவீர்!
நன்றுசெய வேண்டாமா? நாமுழைக்க வேண்டாமா?
தண்டமிழ்த்தாய் ஆளுந் தனிநாடு வேண்டாமா?
பண்டிருந்த நந்நிலையைப் பார்த்துவக்க வேண்டாமா?

நாட்டில் வளங்குறைவா? நானியம்ப வல்லேனோ?
பாட்டுச் சுவைபெருக்கும் பாழடைந்து போகின்ற
ஆற்றுப் பெருக்கிற்கே ஆனதடை என்னேயோ?
காற்றைத் தடுக்கும் கணக்கில்லா வான்மலைகள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/52&oldid=1419287" இலிருந்து மீள்விக்கப்பட்டது