பக்கம்:கனிச்சாறு 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  41

தண்டைப் பிடித்தவரோ தாவித் தமிழரின்
சிண்டைப் பிடித்தனர்காண்! செம்மாந்த எந்தமிழர்
அண்டை நிலத்தில் அடிமையுறத் தாழ்வதுவோ?
பண்டைப் பெருமையும் பாழ்பட்டுப் போவதுவோ?
உண்டிங் குறங்குவதே ஓங்குநிலை என்பதுவோ?
பெண்டிர் விழிப்புற்றால் பேருரிமை வாயாதோ?
தொண்டிற் பெருந்தொண்டு தோகையர்தம் தொண்டன்றோ?
கொண்டை விழியே! கிளர்கேலோ ரெம்பாவாய்! 13

கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாலோ
கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுனம்
பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
பொற்றொடியே துஞ்சல் புரையேலோ ரெம்பாவாய்! 14

திங்கள் முகங்கருகச் செவ்விதழும் தாம்வறளச்
செங்கண் குழிவீழச் சிற்றிடையும் சோர்ந்துவிழப்
பொங்கும் இளம்பருவப் பூரிப்பில் நுங்கணவர்
தங்கை அணைப்பில் இராமுழுதும் சேர்ந்திருந்தே
செங்கதிர்ப் போழ்தில் சிறுதுயிலும் கொள்ளுகின்ற
மங்கையரீர் நுந்தம் மணிவாய் கமழ்தமிழுக்
கெங்கும் இடர்வர வுற்றதுகாண்! இந்நொடியே
பொங்கி எழுவீர் புலர்ந்தேலோ ரெம்பாவாய்! 15

மானே! முன் மாலை மணிக்கதவந் தாழிட்டுத்
தேனும் பழமும் தெளிதமிழும் உண்டவனின்
வானென் வரிமார்பில் வண்டுவிழி மூடினையே!
கூனற் பிறை நுதலீ ! கொண்டதுயில் நீங்குதற்குள்
ஊனின் உயிரை - உளஞ்சான்ற வல்லுணர்வை -
மானம் இறவாது மங்கா தொளிர்தமிழை
ஏனென்று கேட்டே இடர்பலவும் செய்தனர்காண்!
கானப் புலியே! கனல்கேலோ ரெம்பாவாய்! 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/68&oldid=1419381" இலிருந்து மீள்விக்கப்பட்டது