பக்கம்:கனிச்சாறு 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  43

“செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை
வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
இந்தத் தமிழ்நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்! 21

தேக்கும் இளமை திரண்டெழுந்த நற்பாவாய்!
பூக்கும் மலரின் புதுப்பஞ் சணைமேலே
தூக்கம் வளருதியே! தொல்தமிழும் பல்வகையோ
ஆக்கம் தளர்ந்ததுகாண்! அற்றைச்சீர் மாய்ந்ததுகாண்!
ஊக்கம் குறைந்தார் உயர்வறியா நம்மிளைஞர்!
ஏக்கம் நிறைந்தார்! இடுசோற்றுக் கேங்கிநின்றார்!
நோக்கம் கருதியே நுண்ணிடையாய் நந்தமிழைக்
காக்க எழுவாய் கனன்றேலோ ரெம்பாவாய்! 22

மானை நிகர்த்த மருள் விழியே! மாமலைசேர்
தேனை நிகர்த்த தமிழ்மொழியைத் தேராமல்
ஊனை வளர்க்கும் உரிமையால் நின்றழிக்கும்
கூனல் அரசினரின் கொள்கை அறிந்திருந்தும்
ஏனோ உறக்கத் திருக்கின்றாய்? ஏந்திழையே!
கானின் விலங்கும் அடிமை கடிந்தொதுக்கும்;
வானப் பெருந்தமிழர் வல்லடிமை தாங்குவதோ?
யானைப் பிணவே! பிளிறேலோ ரெம்பாவாய்! 23

தேடிக் களைத்தோம் யாம் தீந்தமிழர் உள்ளுணர்வை!
ஓடிக் களைத்தோம்; உரவோர்க்குச் செந்தமிழைப்
பாடிக் களைத்தோம்; பணிபுரிவார் காண்கிலமே!
வாடிக் குலைந்தோம்! வளர்மயிலே! முன்மாலை
ஆடிக் களைத்தாய்போல் - ஆளனொடு நீளிரவாய்க்
கூடிக் களைத்தாய்போல் கொள்ளுதியே வல்லுறக்கம்!
வேடிக்கை யன்று! விறல்பெறநீ ஆர்த்தெழுவாய்!
ஏடி இளையாய்! எழுகேலோ ரெம்பாவாய்! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/70&oldid=1419382" இலிருந்து மீள்விக்கப்பட்டது