பக்கம்:கனிச்சாறு 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 கனிச்சாறு – முதல் தொகுதி


26

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
தமிழ்க் கொலை... !

‘எழுதுவ தெல்லாம் இலக்கியம்' என்னும்
பழுதுறுங் கருத்தைப் பல்கலைக் கழக
மொழியா சிரியன் முத்துச் சண்முகம்
கழிசடை வாயால் கக்கித் தொலைத்தான்!

அண்ணா மலையார் தமிழ்க்கென அமைத்த 5
பண்ணார்ந் திசைத்த பல்கலைக் கழகம்
கொட்டிக் கொடுக்கும் ஊதியம் பெறுவோன்
தட்டிக் கேட்க ஆளிலாத் தன்மையால்
இப்படிப் பற்பல இழிந்த கருத்தெலாம்
தப்படி யாக அடித்துத் தள்ளினான்! 10

இத்தனை நாட்களாய் இலக்கியம் என்னும்
முத்தமிழ்ச் சொற்கு முழுப்பொருள் அறியோம்!
முத்துச் சண்முகம் மொழிவதைக் கேண்மின்!
எத்துப் புரட்டென எண்ணிட வேண்டா!

'அவாள்' 'இவாள்' என்னும் 'ஆனந்த விகடன்' 15
கவர்ச்சி ஓவியக் கழிசடைக் 'குமுதம்'
ஓட்டைவாய்ப் பார்ப்பான் உளறும் மொழிகளைக்
கோட்டைமே லேற்றிடுங் 'கல்கி' 'மித்திரன்'
படித்த வாயைப் பன்முறை கழுவினும்,
அடித்ததீ நாற்றம் அடிவயிறு கலக்கிடத் 20

தீது பரப்பும் 'தினத்தந்தி' முதலிய
பொல்லாத் தாள்கள் பொழிந்தன - பொழிவன
எல்லா எழுத்தும் இலக்கியம் ஆகுமாம்!
அச்சுப் பிழையதும் அகற்றிடல் வேண்டா!
அச்சுப் பிழையுமோர் இலக்கிய அழகே! 25

முத்துச் சண்முக மொழியா சிரியனின்
சொத்தைக் கருத்தைக் கேட்டபின், நாட்டில்
விளையும் விளைவைக் கேட்கவும் வேண்டுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/73&oldid=1512570" இலிருந்து மீள்விக்கப்பட்டது