பக்கம்:கனிச்சாறு 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  49

தமிழ்மொழி ஈதெனத் தகவிலா மொழியை
உமிழ்ந்து கொள்ளை ஊதியம் பெறுவான்!

ஒன்றை 'ஒன்னாய்' இரண்டை ‘ரெண்டா'ய்
மூன்றை ‘மூனா'ய் அவரிடை மொழிவான்! 95
பேச்சுத் தமிழெனக் கல்லார் பிதற்றலைக்
காச்சு மூச்செனக் கற்பிக் கின்றான்!
அரைவேக் காட்டின் ஆசிரி யன்மார்
விரைவாய்க் கற்றுக் கொடுத்திடும் இழிவை
நேரிலே காணில் நெஞ்சு கொதித்திடும்! 100
அரசினர் கேளார்! அண்ணா மலையின்
கரிசனக் காரர் கவனியார் இதனை!
தெ. பொ. மீ.யின் தலைமையில் தமிழ்மொழி
காப்பா ரின்றிக் குலைந்தது நாளும்!

பன்மொழிக் குரிசில் பாவா ணர்தம் 105
வன்மொழி யறிவு வாடிக் குலைந்திட
ஒலிமுறை சொன்முறை மொழிவர லாறு
துளியும் அறிகிலாப் பேதையர் யாவரும்
அண்ணா மலையுள் அமர்ந்து கொண்டே
உண்ணா உணவுக்குத் தமிழ்உலை வைப்பார்! 110

விழியிலார் விழிமருத் துவம்பார்ப் பதுபோல்
மொழியறி யாதார் மொழித்துறைத் தலைவராய்
இற்றை அமர்ந்தனர்; இழிவடா இழிவு!
அற்றை நாளினும் தமிழ்மொழி இக்கால்
பல்லாற் றானும் பரவிய தென்று 115
புல்லிய வாயால் புகல்கின் றானே!
ஐயகோ தமிழே! நினக்கிவ் விழிவோ!
உய்யுமோ தமிழும்? தமிழனும் உய்வனோ?
சிரைத்திடு வானிடம் தமிழைத் தந்தால்
நரைத்தது தமிழெனத் தமிழினைச் சிரைப்பான் 120

ஆளத் தெரியா அமைச்சர்; அவரடி
மீளத் தெரியா மேலதி காரி!
அரைப்புதுக் காசும் அவர்தரும் பணத்தில்
குறைந்திட விரும்பாக் கல்வித் தலைமையர்! 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/76&oldid=1419361" இலிருந்து மீள்விக்கப்பட்டது