பக்கம்:கனிச்சாறு 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 கனிச்சாறு – முதல் தொகுதி


32  'தமிழ்' எனும் கூட்டினுள் தமிழரே இணைக!

நெஞ்சிலும் நினைவிலும் தமிழனே நீதான்!
நெட்டுயிர்க் கின்றஎன் மூச்சிலும் நீதான்!
எஞ்சிய புகழினை எண்ணுதல் செய்வாய்.
எத்தனை நாட்டினை அடைக்கலம் கொண்டாய்.
கொஞ்சமும் நம்நிலை கருதுகி லாயே!
கூறு மொழிக்கிரு செவிகளும் தாராய்!
அஞ்சுதல் கண்டனை; அடங்குதல் செய்வாய்.
ஆயிர மாயிர மாண்டுகள் வீழ்ந்தாய்!

எண்ணிட எண்ணிடத் துணுக்குறும் நெஞ்சம்;
ஏங்கிட ஏங்கிடச் சாம்பிடும் மூச்சு!
பண்ணிலும் உரையிலும் பற்பல சொன்னோம்;
பாலிலும் நெய்யிலும் சொற்களைத் தோய்த்தோம்!
எண்ணறு மேடையில் விண்ணதிர்ந் தாட
ஏ!தமி ழா!விழி! விழி! - எனச் சொன்னோம்!
கண்ணிமை திறந்தனை திறந்தனை இல்லை;
காதுகள் தூர்ந்தனை தூர்ந்தனை! கண்டோம்!

'ஆரியன் என்றனைத் தாழ்த்தினன்' - என்றாய்;
'ஆயிர மாண்டுகள் வீழத்தினன்' - என்றாய்;
‘பாரியும் ஓரியும் கொடைமடம் கொண்டே
பல்லினத் தாரையும் வளர்த்தனர்' - என்றாய்;
‘வாரியும் கொண்டது பழஞ்சிறப்' பென்றாய்;
'வடவனும் புகுந்தனன்; ஒழித்தனன்' - என்றாய்;
'ஆரிதை நம்புவர்? உன்றனை நீயே
அடிமைசெய் தாய்; உனைத் தாழ்த்தியும் கொண்டாய்!

வித்தப் படாதெனத் தடுத்தவர் யாரே?
விளைக்கப் படாதென மறித்தவர் யாரே?
தொத்தப் படாதெனச் சொன்னவர் யாவர்?
தூங்கிடப் போவென உரைத்தவர் யாவர்?
கத்தப் படாதெனும் கட்டளை ஏது?
கனைக்கப் படாதென நெரித்தகை யார் கை?
முத்தப் படாதெனில் உரிமையென் னாகும்?
முனையப் படாதென யாருனைச் சொன்னார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/81&oldid=1419366" இலிருந்து மீள்விக்கப்பட்டது