பக்கம்:கனிச்சாறு 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  67


ஆதலால் மடலின் ஆழத் திருந்த
தீதிலா அன்பையும், என்றன் வாழ்க்கையில்
அன்னவர் கொண்ட அக்கறை உளத்தையும்
உன்னி மகிழ்ந்தேன்; என்னினும் உண்மையாய்ப்
பெரிதும் வருந்தினேன் என்பதே தக்கது.
வருந்திய தேனெனின் நண்பரென் வாழ்வையும் 70
திருந்திய கொள்கைத் தெளிவையும், போக்கையும்
உயிராய்க் கருதிய தமிழ்வாழ் உழைப்பையும்
அயரா முயல்வையும், அறிந்தவ ரென்றே
இதுநாள் வரைக்கும் எண்ணி யிருந்தேன்.
அதுபொய் என்றே அறிந்ததும் வருந்தினேன்.
இவர்போல் ஒருசிலர் எண்ணுவர் ஆகையால்
அவருந் தெளிய இதனை அறைகுவேன்:

இந்திய ஆட்சியை வெள்ளையர் ஏற்று
முந்தைய நிலையை முழுவதும் மாற்றினும்
உள்ளத்து மூண்ட உரிமை முழக்கம் 80
வெள்ளம் போலப் பெருகித் தீயெனக்
கொழுந்து விட்டுக் கொதித்த பின்றான்
எழுந்தது உரிமைசேர் இந்திய ஆட்சி!
வெள்ளையன் தந்த உரிமையால் வடவர்
கொள்ளையர் போலும் நாட்டைக் குலைத்தனர்.

ஒற்றுமை பேசி உரிமையை மாய்க்கவும்
வெற்று நிகரமைக் கொள்கை என்றே
பொருளைக் குவித்து வல்லமைப் புரட்டால்
அருளைக் குலைத்தே அறத்தைக் கொல்லவும்
முந்தி விட்டனர்; மொழிக்கொள் கையென 90
இந்தி தன்னை அரியணை ஏற்றினர்.

ஆங்கிலந் தன்னால் வெள்ளையன் ஆண்ட
ஓங்குயர் திறம்போல் இன்றி, உயர்விலா
இந்தி மொழியினை இந்திய நாட்டின்
சொந்த மொழியெனச் சாப்பறை கொட்டினர்.
செல்வர் அடித்த கொள்ளைச் செல்வம்
வெல்வகை யுதவ வியப்புற்றுத் தேர்தல்
நாடகம் நடித்துத் தீயரால் அமைத்த
பீடறு ஆட்சியில் பிழைகளே மலிந்தன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/103&oldid=1424699" இலிருந்து மீள்விக்கப்பட்டது