பக்கம்:கனிச்சாறு 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  75


47  என்னென்று சொல்வோம்?

துறக்கமென்பார்; இறைப் பணியென்பார்; அன்பென்பார்;
தொலைசென்று கற்றவர் என்பார் - கண்
உறக்க மிலாதுயிர்த் தொண்டென்பார்; பணியென்பார்
உலகெலாம் ஒன்றென ஆர்ப்பார்!
சிறக்க வுண்பார்; உடுப்பா ரருஞ் செயல்களைச்
சிறப்புறச் செய்தனம் என்பார் -ஆனால்
பறக்கும் பறவைக்கும் விலங்குகளும் இல்லாத
பல 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்! 1

வளியும் எழுசுடர் ஒளியும் ஆய் வார்;கடல்
வண்ணமும் மண்ணையும் ஆய்வார் - புற
வெளியும் உலாவி விண் கோளுக்குஞ் சென்றுயிர்
வீழ்வையும் வென்றனம் என்பார்!
வளியும் மடமை யிலாதெங்கும் ஓட்டியே
தோற்றுவோம் புத்துல கென்பார் - ஆனால்
நெளியும் புழுவுக்கும் பாம்புக்கு மில்லாத
நெடுஞ் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்! 2

மருவறப் பேணுக உடலென்பார்; உளமென்பார் !
மற்றுயில் போற்றுக வெண்பார் ! - நிலத்
தொருவருக் குணவிலா திருந்ததிடில் உலகத்தை
ஒழித்திடு வோம்; உண்மை யென்பார் !
தெருவற உற்ற நாள்தோறும் கூட்டங்கள்
திட்டங்கள் பற்பல செய்வார் - ஆனால்
கருநிறக் காக்கைக்கும் கழுகுக்கும் இல்லாத
கடுஞ் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார் ! 3

எவர்முகங் கண்டாலும் இழி'சாதி'க் குறிகள்; ஈங்
கெவர்பெயர் பின்னுக்கும் வால்கள் - தெருச்
சுவர்களில் இல்லக் கதவுகள் தம்மிலுஞ்
சூழ்ந்தன இழி'சாதி'ப் பேய்கள்!
அவரவர் குலத்துக்குத் தனித்தனிக் கழகங்கள்!
அவரவர் குலத்துக்குப் பள்ளி - கற்ற
எவரெவர் ஆனாலும், குலவெறித் தீமைக்கே
இழக்குவர்! என்னென்று சொல்வோம்!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/111&oldid=1424708" இலிருந்து மீள்விக்கப்பட்டது