பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 77
49 தமிழர் திறம்....!
தமிழரிற் சிலருடை உள்ளமே தனிவகை!
அமிழ்தினும் இனித்திடும் அன்பையும் சொரிகுவார்;
அயர்ந்திடும் பொழுதினில் அகத்துவாள் செருகுவார்!
உயர்ந்திடும் வகையெனில் 'உயிர்' என நெருங்குவார்;
உழைப்பினைத் தருகெனில் ஊடலென் றொளிகுவார்!
அழைப்பினும் தவிர்ப்பினும் 'உரிமை' என் றலப்புவார்;
அகத்தினில் ஒன்றுவைத் தாயிரம் சிலம்புவார்!
முகத்தொடு முகம்படப் புரளினும் புரளுவார்;
முரண்படிற் பலர்வயின் முன்னவை கிளறுவார்!
'பரண்' அள வுயர்ந்ததைப் பாதையில் கிடத்துவார்!
பாதையில் எறிந்ததைப் பார்த்தெடுத் துயர்த்துவார்!
'தாதையும் அன்னையும் தமரும்நீர்' - என்பவர்;
தவறினைக் கடிந்திடில் ‘நீவிர்யார்' - என்னுவார்!
உவர்ப்பதும் இனிப்பதும் ஒன்றுதாம் என்பவர்;
உளங்கசந் தோமென உரைதரா தொதுங்குவார்!
குணங்களே காணுவார்; கோணலுற் றொதுங்கிடில்
குறைகளே பரப்பிநற் குணங்கெடத் தூற்றுவார்!
“அறைகுவோம்; - மக்களுக் கடிமை,யாம்; தொண்டினுக்
காவியோ டுடல்பொருள் ஆக்குவோம்” - எனப்பல
கூவுவார்; அரற்றுவார்; குவிபொருள் வாய்த்திடில்
தூவுவார் பழியுரை; தூற்றுவார்! அவர்திறம்
நாவினால் உரைக்கவும் உளம், உயிர் நடுங்குமே!