பக்கம்:கனிச்சாறு 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


50  பாரதிதாசனுக்குப் பா மடல்!


அன்புள்ள பாவேந்தே! வணக்கம். இங்கே
அனைவருமே நலமெனினும், ஐயா, நீங்கள்
தென்புதுவைத் திருமண்ணை - தமிழகத்தைத்
தீந்தமிழர் தமைப் பிரிந்த நாளி னின்று
தென்பில்லை உளத்தினிலே! ஊக்க மில்லை;
அன்பில்லை தமிழர்க்குள்; ஆர்வ மில்லை;
அனைத்துலக வாழ்க்கையிலும் அமைதி இல்லை! 1

முன்பிருந்த நிலையறிவீர்; தமிழர் அன்றே
மூளிகளாய் நின்றதுவும் தெரிந்தி ருப்பீர்;
என்பிருந்த தோல் உருவாய்ச் சதை, நார் இன்றி
எள்ளளவும் மானமின்றித் தமிழர்வாழும்
துன்பிருந்த சூழ்நிலையை அறிந்தி ருப்பீர்!
துளியேதும் மாற்றமில்லை; நிலை அவ் வாறே! 2

சோற்றுக்கு மடிவிரிக்கும் புலவர் கூட்டம்!
சுரண்டுகின்ற வாணிகர்கள்! அடிக்கும் மென்மைக்
காற்றுக்கும் தாங்காத குடில்வாழ் மக்கள்!
கண்ணீர்க்குப் பஞ்சமில்லை; பழம் விளக்கு
மாற்றுக்குக் குஞ்சமெனப் பதவி, பட்டம்!
பகற்கொள்ளை! கலைக்கொலைகள்! பெருகும் மக்கட்
பேற்றுக்குக் குறைவில்லை; சவலை, நோஞ்சற்
பிள்ளைகளோ கணக்கில்லை! உணவுப் பஞ்சம்! 3

உண்மைக்கு மதிப்பில்லை; பொய்யு ரைக்கும்
உலுத்த அர சியல்வாழ்க்கை; நீங்கள் மெச்சும்
பெண்மைக்குச் சிறப்பில்லை; பிறழ்ந்த தாண்மை!
பேயாக அலைந்துபணந் திரட்டும் கீழ்மை!
திண்மையில்லை உள்ளத்தில்! தொண்டிங் கில்லை;
திறமுமில்லை; கல்வியிலும் ஆழ மில்லை.
அண்மையிலே அமைச்சரவை மாறிற் றிங்கே!
அதன் விளைவை அடிக்கடிநான் அறிவிக் கின்றேன் 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/114&oldid=1424666" இலிருந்து மீள்விக்கப்பட்டது