பக்கம்:கனிச்சாறு 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


61  ஓ! தமிழ் மாந்தனே!

அன்று தொடங்கி இன்றைய நாள்வரை
அடிமைத் தமிழனே! நீ, துயில் எழுந்திட
நின்று கதறிய தொண்டைகள் எத்தனை?
நினைத்துப் புழுங்கிய நெஞ்சமும் எத்தனை?
ஒன்றும் பயனிலை; ஒருசிறு மாற்றமும்
உணர்விலும் அறிவிலும் உருப்பெற வில்லைகாண்!
என்று விடியுமோ, இணையிலா விடுதலை
ஏதுங் கெட்ட,யிவ் விருள்நிறை நாட்டிலே?

நேற்றுப் பிறந்தவர் நிலைநின் றெழுந்து, இந்
நீணிலம் முழுதும் நிறுத்தினர் ஆட்சியே!
ஆற்றுப் படுகையில் அமர்ந்திருந் தார்பலர்
அக்கரை ஏறினர்; அவர் நடை தொடங்கையில்
வேற்றுப் புலத்திடை வெற்றிகள் குவித்த, நீ-
விண்ணிலும் மண்ணிலும் விழாப்பல வெடுத்த, நீ
சோற்றுப் பருக்கையிற் சுவைநலங் காண்பதோ?
சூம்பிய மறத்தனம் சூடுறல் என்றையோ?

ஓட்டைக் குடில்களும் உயர்ந்தன மாடமாய்!
உன்னை இரந்தவர் உரிமையைப் பறித்தனர்!
கோட்டை விடுத்தனை; கொள்கையைத் துறந்தனை!
குரலொலி குறைந்தது; குலைந்ததுன் குடிநலம்!
நாட்டை, மொழியினை, மக்களை நலஞ்செயும்
நாட்டமும் கொள்கிலை; நடுத்தெரு நின்றனை!
ஈட்டும் விடுதலை எண்ணமும் இன்றி, நீ
இருந்தனை யேல்,உனை இழப்பதும் உறுதியே!

பட்டம், பதவிகள் பாடழித் தன,உனை!
பார்ப்பனப் பதடிகள் பழிசெயுந் துணிவுடன்
கொட்டம் அடித்தன, துறைதொறும் துறைதொறும்!
கூற்றை விளிப்பதோ அவர் துணை கூடியே?
மட்டந் தட்டுவர்; ஓ!தமிழ் மாந்தனே!
மற்றுநின் நிலையிலோர் மாற்றமும் காண்கிலேன்!
திட்டங் கொள்ளடா, விடுதலைத் தீர்ப்புநாள்
தெரிந்தது பார்;அதன் திகழ்ஒளி மூழ்கவே!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/138&oldid=1424759" இலிருந்து மீள்விக்கப்பட்டது