பக்கம்:கனிச்சாறு 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  131

சொல்லெவர்க்கும் கைக்கு வரும்; மைக்குவரும்!
ஆனாலும் சொல்லுஞ் சொற்கள்
வல்லவரைக் காட்டிடுமோ, வினையல்லால்?
வருங்காலம் சமைக்கும் பாங்கில்
வெல்லவரும் பெரும்படையும் விரிசலுறின்
பகைக்கிங்கே வேறென் வேண்டும்?
நல்லவற்றைப் போற்றுங்கள்; அல்லவையோ
அவைதாமே நலிந்து போகும்!

செந்தமிழ்க்குத் தொண்டுசெய்ய வருவார்க்கொன்
றுரைத்திடுவேன்! “சிறப்போ தாழ்வோ
எந்தமுடி வானாலும் ஒருமுடிவோ
டிறுதிவரை இளைக்கா நெஞ்சம் -
சொந்தமுனைப் பில்லாமல் அயல்நிலத்தில்
விளைத்தறுக்கா மானச் சூடும் -
வந்தவிளை வெஃதெனினும் உவந்தேற்கும்
மனவலிவும் - வளர்தல் வேண்டும்!"

வினைவல்லார் இருப்பரெனின் அவர்திறத்தால்
தமிழ்காக்கும் வினையைச் செய்க!
புனைவல்ல சொல்திறமை உண்டென்று
பொய்புளுகு புனைதல் வேண்டா!
பனைவல்ல பெருந்திறலும் தினைப்பகையால்
பயனற்றுப் போதல் நன்றோ?
நினைவில்லை; பேச்சில்லை; செயலன்றோ
நெடுங்காலம் நிகழ்த்தல் வேண்டும்!

ஒருவினைக்கே நமக்கொருவர் ஒத்துவர
வில்லையெனில் ஒதுங்கிச் செய்க!
தெருமுனையார் பரிமாறும் சிறுசொல்லால்
மற்றவரைத் திட்டித் தீர்த்தல்
எருவினிலே நஞ்சுகலக் கின்றசெயல்!
எழுந்துபயிர் விளைதல் எங்கே?
பெருமுனைப்பால் பிறர்விளைவை எள்ளாதீர்!
பேருழைப்பே பெருமை சேர்க்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/167&oldid=1416760" இலிருந்து மீள்விக்கப்பட்டது