பக்கம்:கனிச்சாறு 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


82 
சாதிப் புழுக்கள் நெளிந்திடும்
சாணித் திரளைகள் நாம்!

எங்குப் பிறப்பினும் வாழினும் என்னினம்
ஏற்றமுற் றுய்யவே வேண்டுவேன்! - ஒரு
தங்கச் சிலையினைக் காப்பதுபோல் தமிழ்த்
தாயினைக் காக்கவே தூண்டுவேன்!
வங்கக் கடலினைத் தாண்டினும் மேற்றிசை
வானைக் கடந்துநாம் வாழினும் - புகழ்
மங்கச் செயுங்குலத் தாழ்ச்சியை என்னினம்
மண்ணிற் புதைத்திடக் கேட்குவேன்!

செந்தமிழ்த் தாய்பெற்ற பிள்ளைகள் நாம்;ஒரு
சேரப் பழுத்த பழக்குலை! - இதில்
எந்தப் பழத்தை உயர்வென்று சொல்வது?
எதனை இழிவெனக் கொள்வது?
முந்தப் பெறும்பல பேரினங்கள் இந்த
முதுமை நிலத்தினில் வாழ்க்கையில் - நாம்
கொந்திப் பிடுங்கிடும் தாழ்ச்சி யுயர்ச்சியால்
குலங்குல மாய்மனங் காய்வதோ?

வேற்றுப் புலத்திடை வாழவந் தோம்; உயர்
விண்ணை - கடல்களை நீந்தினோம்! - நிலந்
தூற்றப் பெறுங்குலத் தாழ்ச்சி உயர்ச்சியின்
தொல்லைகள் நீந்தத் தயங்குவோம்!
மாற்றப்பெறும் புதுத் தோற்றங்கள் பார்க்கின்றோம்;
மற்றும் பொதுமைகள் காண்கிறோம்! - உயிர்
ஊற்றை - உடலினைத் தாழ்வுசொலும், இழி
வுள்ளச் சிறுமைகள் சேர்க்கிறோம்!

வானென ஓங்கிடும் கட்டிடங் கள், பல
வாழ்க்கைப் புதுமைகள் செய்கிறோம்! - விண்
மீனெனப் பூத்த உயிர்களி டையே, கீழ்
மேலென வேற்றுமை பெய்கிறோம்!
தானுயர் வென்றிடும் சாதிகளுள் ஒன்றிற்
வாழ்ந்த நிலைக்கொன்று தாழ்கையில் - தாழ்வு)
ஏனெனக் கேட்க நடுங்கிடு வோம்; அறி
வூக்கமி லாதவோர் தன்மையால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/174&oldid=1424783" இலிருந்து மீள்விக்கப்பட்டது