பக்கம்:கனிச்சாறு 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  139

சேர்க்கின்ற வேற்றுமை பற்பல; நம்மினம்
செய்த கொடுமைகள் பற்பல! - தீமை
வேர்க்கின்ற உள்ளங்கள் பற்பல! கூசிடும்
வெட்டிப் பொறாமைகள் பற்பல!
ஆர்க்கின்ற நூல்களால் என்னபயன்? கோடி
அறங்கள் முழக்கிடும் நூல்களேன்? - நாம்
யார்க்கவை சொல்லத் துடித்திடுவோம்? நம்மை
யாருக்கிங் கே,விலை போக்குவோம்?

‘சாதி’ப் புழுக்கள் நெளிந்திடு மோர்மொத்தைச்
சாணித் திரளையாய் வாழ்க்கையில் - நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்;உல
கோருக் குரைக்கத் துடிக்கிறோம்!
காதுயிர்ப் பற்றசெ விடர்களாய், இரு
கண்களி லாத குருடராய் - நில
வீதி யுலாவரப் பார்த்திடு வோம்! என்ன
வேட்கையில் இங்ஙனம் செய்குவோம்?

முன்னம் பிறந்தவர் என்பதனால் உயர்
மூதுரை சொல்லத் துடிக்கிறோம் - எனில்
சின்னஞ் சிறியராய் வாழ்ந்திடு வோம்;மனச்
சிறுமையி னால்புழு வாகிறோம்!
இன்னும் நினைக்க மறுத்திடு வோம்;உல
கேசும் படிபல பேசுவோம்! - நறுங்
கன்னல் மொழித்தமிழ்த் தாயினமே, சாதிக்
காற்றில் கரைந்துயிர் சாய்வதோ?

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/175&oldid=1424784" இலிருந்து மீள்விக்கப்பட்டது