பக்கம்:கனிச்சாறு 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

ஓங்குத மிழ்ப்புகழ் நல்லினத்தை விட
உற்றார் தொகையும் மிகப்பெரிதோ? - துயர்
தேங்கு மனத்துடன் நீணிலம் யாங்கணும்
தேடிப் பிறர்நிலம் ஓடிவிட்டார்!

பீடுநி றைதமிழ் நாட்டை விட, நம்மைப்
பெற்றவர் ஆளும், மனைபெரிதோ? - பெருங்
காடும்,ம லையும் நிலங்களும் பூமலர்க்
காவும் விளங்கிடக் காண்கிலிரோ?

மாகுன்றத் தோளால் தமிழ்நலங் காத்தலின்
மனைவியின் நல்லுற(வு) ஆங்கினிதோ? - போரில்
போகின்ற நல்லுயிர் செந்தமிழ் நூலொன்றைப்
புரந்ததெனில் இன்பம் வேறும் உண்டோ?

கொல்லிம லைதரு தேன்தமிழ் இன்பினும்
குழந்தைகள் இன்பம் மிகப்பெரிதோ? - ஒரு
சொல்லில் தொடரில் இயங்கிடும் பாக்களில்
சொக்கும் இன்பம் மக்கள் பாலுளதோ?

வீரத்த மிழினம் மாய்ந்தகதை யெண்ணி
வெம்புகிறேன்; உயிர் மங்குகிறேன்? - ஒரு
சேரத்த மிழர்எ ழுந்துவிட்டால் - பழஞ்
செந்தமிழ்த் தாய்நலங் காண்கிலளோ?

தோய்துயர் தூவிய கொத்தடிமை யின்னுந்
தொலையாப் பெரும்பகை யாவையுமே - தமிழ்த்
தாய்தரும் பிள்ளைகள் தோள்களன்றோ, வந்து
தாங்கி யழித்திடல் வேண்டுமிங்கே!

வீரம்சி லிர்த்திடும் தோளெழுவீர்; பெரும்
வெற்பு மலைந்திடும் போர் புரிவீர்! - தமிழ்
ஈரம்க சிந்திடும் நெஞ்சங்களே! பண்டை
ஏற்றம் புதுக்கிட வாருங்களே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/178&oldid=1416776" இலிருந்து மீள்விக்கப்பட்டது