பக்கம்:கனிச்சாறு 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 161


101

எந்த அளவுகோல் கொண்டே அளப்பது?


எல்லாரும் மக்களுக் குழைக்கிறோம் என்கிறார்!
எல்லாரும் உண்மையர் யாமே என்கிறார்!
எல்லாரும் பிறரையே ஏய்ப்பவர் என்கிறார்!
எல்லாரும் தம்தொண்டே மெய்த்தொண்டு என்கிறார்!
எந்த அளவுகோல் கொண்டே அளப்பது?
எவரதை அளந்தே எவருக் குரைப்பது?

அனைவரும் தம்மையே அறிஞர் என்கிறார்!
அனைவரும் தம்மையே ஆய்வாளர் என்கிறார்!
அனைவரும் தம்மையே நேர்மையர் என்கிறார்!
அனைவரும் தம்மையே அழுக்கிலார் என்கிறார்!
எந்த அளவுகோல் கொண்டே அளப்பது?
எவரதை அளந்தே எவருக் குரைப்பது?

தம்கட்சி ஒன்றையே தங்கம் என் றுரைப்பார்!
தம்கொள்கை ஒன்றையே தகுந்ததென் றளப்பார்!
தங்களை மட்டுமே தவமுனி என்பார்!
இங்குளார் யாவரும் இழிந்தவர் என்பார்!
எந்த அளவுகோல் கொண்டே அளப்பது?
எவரதை அளந்தே எவருக் குரைப்பது!

மொட்டையும் தன்னையே முழுமரம் என்றிடும்!
குட்டையும் தன்னையே குரைகடல் என்றிடும்!
மட்டையும் தன்னையே ‘மதிமிகு' வென்றிடும்!
பட்டையும் பழித்துப் பஞ்சுலா வந்திடும்!
எந்த அளவுகோல் கொண்டே அளப்பது?
எவரதை அளந்தே எவருக் குரைப்பது?

திருட்டில் வலுத்தவன் திருட்டை ஆய்கிறான்;
குருட்டுக் கண்ணனே குருடா என்கிறான்;
புரட்டனே பிறரைப் புளுகர் என்கிறான்;
அரட்டை அடிப்பவன் அறிஞனாய்த் திரிகிறான்;
எந்த அளவுகோல் கொண்டே அளப்பது?
எவரதை அளந்தே எவருக் குரைப்பது?

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/197&oldid=1437569" இலிருந்து மீள்விக்கப்பட்டது