பக்கம்:கனிச்சாறு 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 175


114

புதுமைக் கனவுகள்!


அடக்கி ஒடுக்கிடப் பட்டநந் தமிழினம்
ஆட்சி அமைத்திடுமா - இனி
மீட்சி கிடைத்திடுமா - முன்
முடக்கிக் கிடந்திடும் வாழ்வின் உரிமைகள்
மீண்டும் முளைத்திடுமா - இனி
மேலுங் கிளைத்திடுமா?

தொடக்கப் பெருமைகள் சீர்மைகள் வந்துநம்
தொன்மை சிறந்திடுமா - உள
வன்மை பிறந்திடுமா - பெருந்
தடக்குன்றத் தோள்கள் எழுந்து நின்றே நம்மின்
தாழ்ச்சி விலக்கிடுமா - பகை
சூழ்ச்சி துலக்கிடுமா?

ஒடுங்கிக் கிடந்திடும் செந்தமிழ்த் தாயினம்
ஒற்றுமை யுற்றிடுமா - தனி
ஊராண்மை பெற்றிடுமா - உயிர்
நடுங்கிக் குலைந்திடும் வாழ்க்கை நலன்களும்
நன்கு வளர்ந்திடுமா - புகழ்
நாடிக் கிளர்ந்திடுமா?

ஓங்கிப் பெருகிடும் மேன்மைச் சிறப்புகள்
உள்ளம் மலர்ந்திடுமா - மனக்
கள்ளம் உலர்ந்திடுமா?
தேங்கிக் குமிழ்த்திடும் அறிவுமுன் னேற்றங்கள்
தேவை நிறைத்திடுமா - இனத்
தீமை மறைத்திடுமா?

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/211&oldid=1437587" இலிருந்து மீள்விக்கப்பட்டது