பக்கம்:கனிச்சாறு 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  185


119

வீரப்பன் வாயடங்க வேண்டும்!


‘இந்து மதமெனும் இழிநிலை மதத்தில்
வந்து பிறந்தோமே’ - என, நாம் வருந்திக்
கொண்டிருக் கையிலே, கொள்கையில் லாத
‘மண்டுகம்’ ஒன்று, மனம்மிகக் களித்தே
‘இந்துநான’ ‘இந்துநான்’ - எனக்குரல் எழுப்பிச்
சொந்தம் பேசிப் பார்ப்பன வீழ்சுவர்
முதுகால் தாங்கி முட்டுக் கொடுப்பது
இதுகால் வரையும் இல்லாத வியப்பே!

அந்த ‘ஒன்று’தான் அமைச்சுப் பதவியில்
வெந்துகொண் டிருக்கும் ‘வீரப்ப’ மாண்பு! 10

‘இருபதாம் நூற்றாண்டு எட்டப்பன்’ என்னும்
பெருமையைப் பெற்ற பிறவியிப் பிறவி!

மூவாயிர மாண்டு முண்டி யடித்துத்
தாவியும் திமிறியும் தாழ்ச்சியி னின்று
மீண்டுகொண் டிருக்கும் மீளாத் தமிழினம்
ஆண்டுகொண் டிருக்கும் ஆரியப் பிடியில்
மூச்சு முட்டிட முணகிய வாறாய்
ஆச்சுஆச் செனவே அலறிப் பிடித்துத்
தலையைத் தூக்கிப் பார்க்கையில், தலைமேல்
உலையின் சமட்டியால் ஓங்கியடிப் பதுபோல் 20
வீரப்பன் என்னும் விழல்மகன் பார்ப்பனர்க்(கு)
ஈரப்பன் ஆகித் திராவிட இனத்திற்(கு)
எதிரியாய் முளைத்ததை என்னெனப் புகல்வோம்!
பதரினில் பதராய்ப் போனதப் பாழுரு!

கச்சிக் சின்னவாள் கருத்தை யறிந்து, அவர்
உச்சி குளிர்ந்திட உரைகள் தருவதை
வீரப்பன் தவிர வேறுயார் செய்வார்?
நேரப்பன் ஆகி உரைகள் நிகழ்த்துவார்?
‘ஆரிய திராவிடப் பருப்புவே கா’தெனும்
வீரிய உரைத்திறன் யார்வாய் வெளிவரும்? 30
பார்ப்பன இனத்திற்குப் பரிந்து, முன் வந்தே!
ஆர்ப்பரித் தெழுந்த ஆத்தோல் புலியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/221&oldid=1437417" இலிருந்து மீள்விக்கப்பட்டது