பக்கம்:கனிச்சாறு 2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  213


142

மொழியுணர்வு தோன்றாமல்
இனவுணர்வு முகிழ்ப்பதில்லை!


மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு
முகிழ்ப்பதில்லை; வலுப்பதில்லை; இயங்குவதும்
இல்லை என்க!
முன்னோர்தம் வரலாற்றைப் பெருமைகளை
உணராதார் முனைந்தெழுந்து நிற்பதுவும்
முடியா தென்க!
பழியுணர்வு வடவர்களோ தமிழினத்தை
வீழ்த்துதற்குப் படைசேர்த்து நம்வலிவைப்
பாழ்செய் கின்றார்!
பதைப்பில்லை; உணர்வில்லை; தமிழரிடம்!
பங்காளிச் சண்டைகளும் வலுப்பெற்றுப்
பகைகொள் கின்றார்!
விழியுணர்வும் செவியுணர்வும் மனவுணர்வும்
இல்லாத ஏழையர்கள் உரிமைபெற
விழிப்ப தென்றோ?
விழித்தவரோ அடிவருடிப் பிழைக்கின்றார்!
வேற்றுவர்பால் இனங்காட்டிக் கொடுக்கின்ற
வீண ரானார்!
இழிவுணர்வும் கதையுணர்வும் பொழுதுபோக்
கிடும் உணர்வும் எழுந்துநின்றே இனவுணர்வைச்
சிதைக்கும் இங்கே!
ஏமாறும் தமிழரிடை இணக்கவுணர்
வெழுந்துசெயல் தோன்றியினம் போராடிச்
செழிப்ப தெங்கே?

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/249&oldid=1437452" இலிருந்து மீள்விக்கப்பட்டது