பக்கம்:கனிச்சாறு 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௫


110. சாதிச் சிக்கல்களும் அவற்றால் மதமாற்றங்களும் நடந்துவந்த சூழலில் சாதிநிலை வேரறுத்துச் சமயநிலை சீர்திருத்தித் தமிழராய்க் கூட அழைப்பு விடுக்கிறது இப்பாடல்.

111. தென்மாவட்டங்களில் சாதிக் கொடுமையால் மதமாற்றம் நடந்தபொழுது இந்துமதப் பார்ப்பனர்கள் அலறத் தொடங்கி இந்து மதச் சிறப்புக் குறித்துக் கதறலாயினர். அக்கால் அம் மதஇழிவு குறித்தும், அது ஒழிந்திடல் வேண்டுவது குறித்தும் இயற்றிய பாடல் இது.

112. திராவிடர் கழகம் 1981-இல் அறிவித்திருந்த மநு நூல் எரிப்புப் போராட்டத்தில் நம் ஐயா அவர்கள் கலந்துகொண்டதால் தளைப்படுத்தப்பட்டுக் கோவையில் சிறைப்படுத்தப் பட்டிருக்கையில் எழுதியது இப்பாடல். தமிழர் மீதான இழிவு இருள் நீங்கிச் சமன்மை உணர்வும் பொதுமை உணர்வும் ஓங்க வேண்டுமாயின் மநுநூலும், வேதமும், புராணமும் அழிதல் வேண்டும்.

113. பாடல் எண் : 112 எழுதப்பெற்ற சூழலிலேயே இப்பாடலும் எழுதப் பெற்றது. மக்கள் விடுதலை பெற்றுய்யச் செய்ய வேண்டிய பணிகளை விளக்குகிறார் பாவலரேறு.

114. இப்பாடலும் முந்தைய பாடல் எழுதப்பட்ட சூழலில் எழுதப் பெற்றதே. தமிழின அடிமைத்தனம் வீழ்ந்திடுமா எனும் கருத்தைக் கருவாய்க் கொண்டது இப்பாடல்.

115. இப்பாடலும் முந்தைய பாடலின் காலத்திலேயே எழுதப் பெற்றது. எரித்துச் சாம்பலாக்கப்பட வேண்டிய பார்ப்பனிய நஞ்சு பரப்பிய இழி நூல்களினால் தமிழினம் எவ்வகையில் சிதைவுற்றது என்றும் அதனால் அவற்றின்மீது பற்றி எரியட்டும் தீ என்றும் சொல்கிறது இப்பாடல்.

116. மொழி, இன நாட்டின் இற்றை நிலை எண்ணி இறுதிச் செயல்நிலை இதுதான் எனச் செயற்பட அழைக்கிறார் பாவலரேறு.

117. மொழி, இன, நாட்டு முன்னேற்றம் தேட எவை எவற்றையெல்லாம் செய்தல் வேண்டுமெனக் கூறப்பெற்றிருக்கிறது இப்பாடலில்.

118. ‘பெரியார், அண்ணாவின் பேச்சுகள்-எழுத்துகள் நச்சுவிதைகள்’-எனச் சங்கரப் பார்ப்பான் பேசியதற்குக் கொதிப்புற்றுப் பாவலரேறு எழுதிய விளக்கப்பாடல்.

119. ம.கோ.இரா. அமைச்சரவையில் இந்துமத அறநிலையத் துறை அமைச்சராய் இருந்த வீரப்பன், தான் ஒரு பார்ப்பன அடிமையாய் இந்துமதத்தைப் போற்றிப்பேசுகையில், எட்டப்பப் பிறவி வாயடங்க வேண்டும் எனக் கடிந்து எழுதியதிப் பாடல்.

120. தமிழினம் காக்கச் செய்யப்பெற வேண்டிய பெரும்பணிகள் நிறைய இருக்கையில் அனைவரும் கூடிவந்து செய்வரோ என நெஞ்சம் வருந்தி எழுதப்பெற்றது இப்பாடல்.

121. கட்சிகள், மதங்கள், சாதிகள் கழன்று தமிழராய் மேன்மையடைவதே மெச்சும் பெரும்பணி என்கிறது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/26&oldid=1512995" இலிருந்து மீள்விக்கப்பட்டது