பக்கம்:கனிச்சாறு 2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


153

அய்யாவே பாவேந்தே!


-அய்யாவே பாவேந்தே! அன்றைக்கும் உம்மை
ஆதரிக்கவில்லை. இவ் வரசும், இந் நாடும்!
பொய்யாக இன்றைக்கும் நூற்றாண்டு விழாவைப்
புரையோடும் புன்மையொடும் ஆர்ப்பாட்டத் தோடும்
செய்யாத விளம்பரங்கள் வேடிக்கை யோடும்
செய்கின்றார்; மகிழ்கின்றார்! போதாதா உமக்கே?
எய்யாத பெரும்புகழைச் செய்துவிட்டார்; எனினும்
எக்கருத்தைச் சொன்னீர்கள், அதை மறந்து விட்டார்?

தமிழ்வாழச் சொன்னீர்கள்; தமிழால்வாழ் கின்றார்!
தமிழினத்தின் முன்னேற்றம் கருதிடச்சொன் னீர்கள்!
இமிழ்வானம் எட்டும்வரை பொருள் குவித்து விட்டார்!
இந்நாட்டை உயர்த்தத்தான் சொன்னீர்கள்; அதனால்
தமிழ்அரசைத் தில்லியிலே மதிக்கின்ற வாறு
தாளங்கள் மேளங்கள் கொட்டுகின்றார்! இனியும்
எமிலுயர்வு தாழ்வில்லை! வடவர்களும் இங்கே
இருக்கின்ற தமிழர்களும் ஒருமைகாக் கின்றார்!

இந்தியினை எதிர்த்திடவே சொன்னீர்கள்! தமிழர்
இந்தியினை எதிர்த்தபடி இந்திகற்க லானார்!
செந்தமிழில் கல்விகற்கச் சொன்னீர்கள்! இவரும்
செந்தமிழைக் கற்கின்றார், ஆங்கிலத்திற் கிணையாய்!
‘எந்தமிழர் இனமொன்றே; சாதியொழித் திடுக’
என்றீர்கள்! இடவொதுக்கல் சாதியினால் செய்தார்!
‘செந்தமிழ்நாட் டைத்தனிநா டாக்குக’ என் றீர்கள்!
செய்கின்றார், செய்கின்றார், செய்துகொண்டே உள்ளார்?

சிலைவைத்தார் உங்களுக்கே! நூற்றாண்டு விழாவைச்
சிறுபள்ளி முதலாகக் கல்லூரி வரைக்கும்,
கலைவிழாக்கள், பாட்டரங்கம், பட்டிமன்றம் என்றே
கணக்கின்றி ஊர்தோறும் நகர்தோறும் நடத்தி
அலையலையாய் மக்களுடன் கொண்டாடி விட்டார்!
ஆகாகா! உங்கள் புகழ் வானுயர்த்தி விட்டார்!
மலையாதீர், பாவேந்தே! அமைச்சர்களும் பிறரும்
மாண்புடனே வாழ்கின்றார், தமிழ்மாண்பைக் கொன்றே!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/260&oldid=1437470" இலிருந்து மீள்விக்கப்பட்டது