226 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்
படர்கின்ற தமிழ்நில த்தில்
நல்வகையாய் உணர்வெழுதி மறம்பேசி
நல்விளைவை நாட்டு தற்குள்
அல்விளைவே வளர்ந்துவர அவ்விளைவில்
குளிர்காய்ந்தே அறத்தைக் கொன்றே
வல்கரவால் பொருள் செய்து குடல் நிரப்பும்
வன்னெஞ்சர் வீழ்வ தெங்கே?
தொய்யாத நல்லுளமும் வல்லுணர்வும்
கொண்டுவிழி மூடல் இன்றிச்
செய்யாத பெரு முயற்சி செய்தேநம்
செந்தமிழும் இனமும் நாடும்
பொய்யாத முன்னேற்றம் உரிமை நலம்
பொலிந்திடவே உழைக்கும் போது
எய்யாத பழிச்சொல்லும் முதுகம்பும்
எய்பவர்கள் இளைப்ப தெங்கே?
இருந்தாலும் நம்கடமை செயல்வேண்டும்
எந்தமிழை மீட்க வேண்டும்!
திருந்தாத நம்மினத்தைத் தெளிவிக்க
வேண்டும்; அதைத் திருத்தல் வேண்டும்!
வருந்தாத வருத்தங்கள் வந்தாலும்
நம்நிலத்தை மீட்டல் வேண்டும்!
பொருந்தாதார் புறம் பெயர்க! வன்தொண்டர்
புறப்படுக! வீரம் எங்கே?