பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 233
159
சட்டிக்குத் தப்பி, நெருப்பில்
விழுந்தது தமிழகமே
வட்டிக்குத் தேம்பி, முதலை
இழந்திடும் வறியர்களாய் -
மட்டித் தனமாய்க் கவர்ச்சியில்
மயங்கிடும் மடித்தமிழர் -
எட்டிக் கொட்டையில் இனிப்பைச்
சுவைத்திட இசைந்து விட்டார்!
சட்டிக்குத் தப்பி நெருப்பில்
விழுந்தது தமிழகமே!
வெட்டிக் கொண்டு செத்திடும்
நரவெறி வீம்பர்களாய் -
கட்டிக் கொண்டு கடலில்
இறங்கிடும் களியர்களாய் -
முட்டிக் கொண்டு முரண்பட்(டு)
அலைந்து முடிவினிலே
தட்டிப் பறிக்கும் தலைமையின்
கால்கீழ்த் தங்கினரே!
‘எதற்கு’ ‘ஏன்’ ‘எதை’ ‘எவ் வாறு’-என
எண்ணும் உணர்விலராய் -
‘முதற்கோள் என்ன’ முடிவுகொள்
என்’னெனும் முனைப்பிலராய்ச்
சிதற்காட் பட்ட சுவடியாய்ச்
சிற்சிறி தாயழியும்
முதற்றாய்த் தமிழினம் முழுவதும்
அழிவுற முற்பட்டதே!
தப்படித் தாடும் தொம்பருக்
காட்டும் தலைக்குரங்காய்ச் -
செப்படித் தாடும் ஆட்டத்தில்
இழக்கும் சூதர்களாய் -
முப்படித் தாக்கம் நாட்குநாள்
எய்துவர் முழுத்தமிழர்!
எப்படித் தேற்றுவோம்? எவ்வகை
ஆற்றுவோம் இவர்களையே!