பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 237
163
பைந்தமிழ் நாடு! பழம்பெரும் நாடு!
பைந்தமிழ் நாடு பழம்பெரும் நாடு!
ஐந்திணை ஒழுக்கம், அருமைத் தமிழ்மொழி,
துலங்குநல் இலக்கியம் தோன்றிய நாடு!
நலங்கெட இன்று நலிந்தது! அதனை
மீண்டும் புதுக்கிட - மேலுறச் செய்திட
நீண்ட முயற்சிகள் நிகழ்த்திட வேண்டும்!
மொழிநிலை, இனநிலை, பொருள் நிலை, அரசியல்,
பழிசே ராத பண்பாடு, கல்வி -
எனும்பல நிலைகளில் இளைஞர்கள் உழைத்தே
இனம்மேம் பாடுற இயங்குதல் வேண்டும்.
10
இற்றை இளைஞர்கள் எதனிலும் ஊன்றாது
வெற்றுச் சருகுகள் வீசிடும் காற்றில்
அலைந்து திரிதல்போல் அல்லல் உறுவர்!
குலைந்து போகும் குமுகாய நிலைகளைச்
சீர்செய் திடவோ சிறப்புறச் செய்யவோ
ஓர்எள் முனையும் உழைத்திட விரும்பிலர்!
கால்நோ காது, கைநோ காது
மேல்உடை அழுக்குப் படியாமல் உழைக்கவே
இளைஞர் விரும்புவர்; இளமை வீ ணாக்குவர்;
விளைவெதும் இல்லை; வீண்ஆர வாரம்!
20
பெண்களைப் போலப் பீடுஇல் லாமல்
கண்களின் கவர்ச்சியே பெரிதென்று கருதி,
மேனி மினுக்குதல், மின்னுடை உடுத்தல்,
கோணி நடத்தல், கொச்சை பேசுதல்,
ஊர்உலா வருதல், ஓங்கிச் சிரித்தல்,
சேர்ந்துகை கோத்துச் சிறுநடை போடுதல்,
கல்லூரிக் கன்னியர், பள்ளிச் சிறுமியர்
செல்கையில் பின்சென்று சிறுசிறு குறும்புகள்
பண்ணுதல் - இவையெலாம் இளைஞர்கள் பழக்கமாய்
நண்ணி வளர்ந்து நாட்டை நலித்திடும்!
30