பக்கம்:கனிச்சாறு 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


167

வெல்லாத ஆரியர் வென்ற கதை இது!
வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே!


தமிழம் திரிந்து சமற்கிரு தத்தில்
‘திரமிளம்’ ஆகித் ‘திரவிடம்’ நின்றது!
அமிழ்தாம் தமிழை அழித்துத் திராவிடம்
ஆக்கிய ஆரியத் தில்லு முல்லிது!
கமழும் மொழிப்பெயர் இனப்பெயர் அழிந்ததால்
கன்னித் தமிழும் தமிழரும் அழிந்தே
உமிழத் தக்க ‘திராவிடர்’ ஆயினர்!
உயிர்போய் விட்ட பிணமாய்க் கிடந்தனர்!

‘திராவிடர்’ எனும்சொ(ல்)லைத் தமிழர் தவிரத்
தெலுங்கரோ, கன்னட ரோ,மலை யாளரோ
பராவுதல் இல்லை; பயில்தலும் இல்லை!
பாழும் தமிழரே பயின்று வந்ததால்
திராவிடர் இருக்கத் தமிழர் அழிந்தனர்!
தமிழர் அழிந்ததால் தமிழுணர் வழிந்தது!
திராவிடர் எனும்சொல் கழக நூல் எதனினும்
தெள்ளிப் பார்க்கினும் தெரியவிய லாதே!

இல்லாத பெயரை இருப்பதாய்ச் சொல்லி
இருந்த பெயரை இழந்தனர் தமிழர்!
பொல்லாத ஆரியச் சூழ்ச்சியை அறியாப்
புழுக்கைத் தமிழரே தமிழரை அழித்தனர்!
எல்லாரும் தெலுங்கர் கன்னடர் மலையராய்
இருந்திடத் தமிழர் இல்லாது போயினர்,
வெல்லாத ஆரியர் வென்ற கதையிது!
வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/278&oldid=1437490" இலிருந்து மீள்விக்கப்பட்டது