பக்கம்:கனிச்சாறு 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


அழித்துக் கலைப்பதை அறிய வில்லையா?
பழித்துச் சிதைப்பதைப் பார்க்க வில்லையா?

எத்தனை முறைநாம் எதிர்ப்பது இந்தியை?
அத்தனை முறையும் அடங்கிடு வதுபோல்
காட்சி காட்டிக் கண்மறைந் திருந்தே,
ஆட்சி வடவர் படிப்படி யாக
மீண்டும் மீண்டும் மேலேறி வலிவுடன்
ஆண்ட தமிழை அழித்திடல் காண்கிறோம்!

வடவர் பிடியினில் தமிழகம் வந்ததால்
கெடட்டும் தமிழும் தமிழக மும்என 40
அன்னவர் சூழ்ச்சியாய் அன்றன் றைக்கும்
கன்னல் தமிழைக் கழிசடை இந்தியால்
சிற்சிறி தாகச் சீரழித் திடுவதை-
பற்பல முறைநாம் பார்த்த தில்லையா?

இன்னும்நாம் இந்தியை எதிர்த்திடல் இயலுமா?
பின்னர் ஏன் இந்தியை எதிர்ப்பதாய்ப் பிதற்றுவோம்?

இந்தியா உளவரை இந்தியும் இருக்கும்
முந்தியே கூறிய முழுவுண்மை இதுவே!
வடவர் ஆள்வது இந்தியை வைத்தே!
முடவன் கொம்புத் தேனுக்கு முனைதல்போல் 50
இன்னமும் தமிழை ஏற்றமுற் றுயர்த்திட
நன்னருஞ் செயல்களை நாம்நினைத் திருப்போம்!

வடவன் தமிழை வாழவும் வைக்கான்!
மடமொழி இந்தியை மறுக்கவும் மாட்டான்!
தமிழைத் தாழ்த்தினால் தமிழரும் தாழ்வார்!
தமிழர் தாழ்ந்திடில் தமிழ்நில ஆட்சி
இந்தியன் கைகளில் இருக்கவே இருக்கும்!
அந்தத் திட்டந்தான் அவனுடைத் திட்டம்!
இந்த நிலையினில் இந்தியைத் தடுக்க
எந்தக் கொம்ப னாலும் இய லாது! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/280&oldid=1437492" இலிருந்து மீள்விக்கப்பட்டது