பக்கம்:கனிச்சாறு 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௯

156. 8.9.1991 - அன்று சென்னையில் 'தலைநகர்த் தமிழ்ச்சங்கம்' நடத்திய 'தமிழர் பாதுகாப்பு மாநாட்'டில் தமிழின உரிமையை வலியுறுத்தியும், இராசீவ் கொலைகுறித்துத் தணுவைப் புகழ்ந்தும் பேசியதற்காகச் செயலலிதா அரசால் சிறை வைக்கப்பட்டார் நம் ஐயா அவர்கள். அப்போது சிறையைப் பற்றி அரசுக்கு அறிவுறுத்தியது இப் பாடல்.
157. உழைப்பிலும் செயலிலும் தமிழினம் உய்தலே குறியென வாழ வழி கூறுவதோடு, ஊக்கம் இழக்கச் செய்தல் வேண்டாமென்று உரைக்கிறார் பாவலரேறு.
158. நாற்பதாண்டுகளாய் நோற்பார்போல் நொடிப்பொழுதும் தளர்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும்நாம், நுடங்கிப் போகும் மூடனாய் இருக்கும் தமிழனை அடிமை மீட்குவோம் - என்றுரைக்கிறார் பாவலரேறு.
159. எட்டிக் கொட்டையில் இனிப்பைச் சுவைத்திடும் தமிழின நிலையின் விளக்கம் இப்பாடல். 1991-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் செயலலிதா தமிழக ஆட்சியைப் பிடித்ததைக் குறிப்பால் உணர்த்தியது.
160.1991-ஆம் ஆண்டு செயலலிதாவின் அழிம்பு ஆட்சியில் தமிழர்படும் பேரின்னல்களைத் தாங்க இயலாமல் செயலலிதாவின் முழக்கம் நிற்கும் காலமே தமிழினம் உயிர்பிழைக்கும் காலமென்று உரைக்கின்றார் பாவலரேறு.
161.1991-இல் செயலலிதா ஆண்ட சூழலில் தமிழ் நாட்டாட்சி இழிவுற்றிருந்த நிலையை அப்படியே காட்சியாக்குகிறது பாடல்.
162.மக்களெல்லாம் பார்ப்பனர்க்கே அடிமை எனும் பழிமை நீக்கித் தமிழோடு தமிழராய் 'நேர்மையாய் நெறிவாழ்வீர் என்று அறிவுறுத்துகிறார் பாவலரேறு.
(இப்பாடல் ஓ! ஓ! ஓ! பார்ப்பனரே! - என்றே ஐயா அவர்களால் தலைப்பிடப் பெற்றிருந்தது.
முன்னரே (இத்தொகுப்பில் 62ஆம் பாடல்) ஓ! ஓ! ஓ! பார்ப்பனரே!-என வேறொரு பாடலுக்குத் தலைப்பிட்டிருப்பதால் இப்பாடலின் தலைப்பு இன்னபடி மாற்றப் பெற்றிருக்கிறது.)
163.’மாபெரும் தமிழ்ப் பேரினம் அழிந்து கொண்டுள்ளதே, இளைஞர்களே இழிவாய்ப் போகாதீர், குன்று மண் ஆனதாய்க் குன்றிப் போதல் வேண்டா! கேடுகள் சாய்க்க, பைந்தமிழ் நாடு மீட்க வாருங்கள்' என அழைக்கிறார் பாவலரேறு.
164.'தடா'க் கொடுஞ்சட்டத்தின்கீழ் நம் பாவலரேறு ஐயா அவர்கள் சிறைப்படுத்தப்பட்டபோது எழுதியது இப்பாடல்.
தமிழினத்தின் அடிமை நிலையினை விளக்கியதோடு, தம்மின் உறுதிநிலைபோல ஆயிரம் பேர்களேனும் இருப்பாராயின் தமிழினம் விழித்தெழுமே என்கிறார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/30&oldid=1419505" இலிருந்து மீள்விக்கப்பட்டது