பக்கம்:கனிச்சாறு 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௦

கனிச்சாறு இரண்டாம் தொகுதி


165. இப்பாடலும் 'தடாச் சட்டத்தின்கீழ்ச்சிறைப்படுத்தப்பட்டபோது எழுதப் பெற்றதே.
சுரண்டிக் கொழுக்கும் உடம்பொடும், 'சொகுசு' வாழ்வொடும் மக்களை வாட்டி வதைக்கும் செயலலிதா தமிழினத்தை அழிக்கின்ற கொடுமையை விளக்குகிறது இப்பாடல். 'தடா'க் கொடுஞ்சிறையில் தாம் அடைக்கப்பட்டாலும் அது தம்மை எதுவும் செய்திட இயலாது என்று சூளுரைக்கிறார் பாவலரேறு.
166.எதையும் பெரிதாய் எழுதிடாமல், ஈகம் செய்திடாமல், சில நூல்கள் எழுதிப் பேரறிஞரெனச் சிலுப்பிக் கொண்டிருக்கும் சிலர், உள்ளுக்குள் நாறுகின்றனர்; பொய்ம்மையாய்ப் பெருமை கொள்ளத் துடிக்கின்றனர். நிலைப்பதற்கென்ன தான் செய்துவிட்டனர் - என வினாவெழுப்புகிறார் பாவலரேறு.
167. ‘திராவிடர்’ என மயங்கித் தமிழர் தம்மை இழிவுபடுத்தும் வரலாற்றை விளக்குகிறது இப்பாடல்.
168.இந்தித் திணிப்பு. இந்தியர் ஆளுமை, ஆட்சியர் போலிமை - இவற்றின் கொடுமைகளை விளக்கித் தமிழ் இளைஞர்கள் விழிப்படைய வேண்டிய கடமைகளை விரித்துரைக்கிறார் பாவலரேறு. சாகவே எனினும் ஒழுங்குறச் சாவோம் - எனத் தமிழினத்தை ஒழுங்குப்படுத்தும் இறுதி எச்சரிக்கை இது.
169. செயலலிதா ஆட்சியில், ஆட்சியர் செய்யும் அட்டூழியங்களுக்கிடையில் உய்யுமோ நாடு என்று கவலை கொள்கிறார் பாவலரேறு.
170.நம் ஐயா பாவலரேறு அவர்களால் கொண்டுவரப் பெற்ற தென்மொழியின் கடைசி பா இதழில் (சுவடி : 27, ஓலை : 8) ஐயா அவர்கள் எழுதி வெளிவந்த அட்டைப்பாடல் இது.
171. கட்சி பற்றியும், தமிழ்ப் புலமை பற்றியும், சாதி மதம் பற்றியும் கதைக்கின்றோம் - தமிழின நலம் சிதைக்கின்றோம் என வருந்திப் பாடியது இப்பாடல். (இப்பாடல் ஐயா அவர்களின் எழுது அட்டையில் இருந்தது. அவர்களின் மறைவுக்குப்பின் வெளியிடப்பெற்றது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/31&oldid=1419507" இலிருந்து மீள்விக்கப்பட்டது