பக்கம்:கனிச்சாறு 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி



5  இருட் பூங்குயிலே!

முன்னவை முழக்கி முதுதமிழ் மொழிதல்,
முத்தமிழ் நாட்டினிற் குழைத்தல்,
சொன்னவை நடத்திச் செயற்படக் காட்டல்,
சூதொழித்தே ஒழுங் கேற்றல்,
மன்னவை அரசிற் குயர்வெடுத் துரைத்தல்,
மக்களை ஒன்றென மதித்தல்,
இன்னவை என்னவர்க் கேற்றவை என்றே
இயம்புக இருட்பூங் குயிலே!

தூயவை எண்ணல், துணிவன துணிதல்,
தூங்கா தொருவினை முடித்தல்,
தீயவை யொறுத்தல், தெளிவுரை கோடல்,
தெரியார்க் கவையெடுத் துரைத்தல்,
ஏயவை ஈதல், எழுத்தறி வித்தல்,
இகழ்வெனப் படுவதை இழித்தல்,
ஆயவை என்னவர்க் கானவை என்றே
அறைவாய் இருட்பூங் குயிலே!

பிரிந்தவை கூட்டல், பெண்ணுயர் வாக்கல்,
பீடுற யாங்கணும் நிற்றல்,
சிரித்தவை சிரித்து, நகைப்பவை நகைத்துச்
சீரிதழ் மலர்வன காட்டல்,
செரித்தவை யுண்ணல், செலவினைக் கட்டல்,
சீரெனில் உயிர்தரல் எனவே,
தெரித்தவை என்னவர்க் குரியவை என்றே
தெளிப்பாய் இருட்பூங் குயிலே!

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/44&oldid=1523580" இலிருந்து மீள்விக்கப்பட்டது