பக்கம்:கனிச்சாறு 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


16  செய்குவீர் இன்றே!

‘முத்துக் கொழித்ததும் யாங்கள் - கடல்
மீதில் மரக்கலம் விட்டதும் யாங்கள்!
சித்துப் பயின்றவ ரெம்மோர் - பெருஞ்
சீருஞ் சிறப்பொடும் வாழ்ந்தவர் முன்னோர்!
மெத்த இலக்கியங் கண்டோர், - என
மேன்மைப் புகழுரை பற்பல கூறி
எத்தித் திரிந்திடு வோரே - இவ்
வேழை இயம்பிடும் நல்லுரை கேட்பீர்!

தாயை அழுதிட வைத்தீர் - அவள்
தண்டமிழ் நாவிற் றுளைபல செய்தீர்;
பேயை அரியணை வைத்தீர் - அவள்
பேசும் இழிமொழிக் காடவுஞ் செய்தீர்;
காயைக் கனியென்று கொண்டீர் - கருங்
கல்லை மலரென்று நுகரவுஞ் செய்தீர்;
ஆயுந் தமிழ்ப்புல வோரை - நகை
யாடி வருகுவீர் ஏதுரை சொல்வேன்?

புன்மை மொழிபல சொல்வீர் - பல
பொய்மைச் செயல்பல நாளுமே செய்வீர்;
மென்மை உளத்தினை விட்டீர் - அறம்
மேவும் பணிகளின் மேன்மை மறந்தீர்;
வன்மைத் திறங்களு மின்றி - நல்
வாழ்வுப் பயன்களும் உயர்வது மின்றி,
முன்மைத் தமிழரைப் பற்றி - வாய்
முரசறைந் தேசெயல் முற்றுந் துறந்தீர்!

கற்றவ ருஞ்செய லற்றவர் - எனிற்
கல்வியில் லாதவர் விளைவெது காண்பார்?
பெற்றவர் காத்திடாப் பிள்ளை - பிறர்
பேணுவ தால்வளர்ந் தோங்கிடல் இல்லை!
பற்றுக் குறைந்தது நாட்டில் - தமிழ்
பண்டைத் திறத்தினில் சிதைந்தது முற்றும்;
உற்ற புலவரை நாடி - தமிழ்
உய்ந்திடும் வகையினுக் கானவை செய்வீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/62&oldid=1424659" இலிருந்து மீள்விக்கப்பட்டது