பக்கம்:கனிச்சாறு 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


இலக்கிய விழைவிலர்; இலக்கணம் படிக்கிலர்;
எழுத்திலும் உரையிலும் இழிகுவர்;
கலக்குறு மனத்தினர்; கசிதுயர் கருதிலர்;
களவிலுங் கொலையிலும் அழிகுவர்;
துலக்கமில் மணங்கொளத் துடிப்புறு முளத்தினர்;
தொலைகிலாப் பிரிவினால் ஒழிகுவர்;
வலக்கரம்; கரவுளம்; வனைவிலர்க் கிராப்பகல்
வருந்திநெஞ் சழன்றுயிர் கழிகுவேன்! 5

பயனறு வினைசெயப் பலபடக் கரைந்திழி
பகட்டினில் உளமுயிர் கூடுவர்;
வயின்வயின் இளையவர் மடந்தையர் குழுமுவர்;
வரை துறை யறநகை யாடுவர்;
மயலுற விழிதகை யுரைதருஞ் சுவடிகள்
மலிகடை புகுந்தவர் தேடுவர்;
வியனுறு தமிழக வினைவழி வுறவுளம்
விசிந்துயிர் விசிந்துடல் வாடுவேன்! 6

அறிவியல் உயர்வறிந் தனரென முழங்குவர்;
அடிப்படை உளவுயர் வழிந்தனர்;
பொறியிய லறிந்தன மெனவுரை தருக்குவர்;
புகுபயன் மறந்தொழுங் கொழிந்தனர்;
நெறிமுறை பிறழ்ந்தனர்; மனையறந் துறந்தனர்!
நிலையினில் நொடிநொடி யிழிந்தனர்;
குறியிலர்; பிடியிலர்; துணிவிலர்; வினையிலர்;
குலைவுறு மவர்க்குளம் அழுங்குவேன்! 7

முதுதமிழ் உலவிய முனைப்பொழு திலங்கிய
முழுவளங் குறைவுற வினைப்பயன்
எதுவென அறிகிலன்; இடர்ப்படும் மனத்தினன்;
இலவென அலைகுவன்; நினைப்பிலன்;
மதுமலர்க் குழலியர் - பகைவரின் மனைவியர்,
மறத்தமிழ் அரசரின் குலைப்பினால்
கொதிபெறும் உளத்தொடு கொடுத்தவெங் கொடுசொலோ,
குலைத்தது குலைத்ததென் றரற்றுவேன்! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/68&oldid=1424689" இலிருந்து மீள்விக்கப்பட்டது