பக்கம்:கனிச்சாறு 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  33


இயல்பழிந் திழிசெயல் விளைத்தமூ வேந்தரின்
இழிவதோ? மறமதோ? நீங்கிலா
மயல்நினை வுளங்கொள மணித்தமிழ்ப் புலவரை
மதித்திடா வினையிதோ? பாங்கிலாச்
செயலுறத் துணிந்தவர் முறைகெட நடத்திடச்
சினந்தநற் றுறவியர் தாங்கலோ?
அயல்நில வரசரின் துயர்பொறா வுரைகளோ?
அழிநிலைக் கடியென ஏங்குவேன்! 9

சமையுறாச் சமயநேர் மையறுஞ் செயலினால்
சமணரின் மனங்கொதி வுரைகளோ?
இமையவெண் பொருவரை எதிர்ந்தவர் கடந்துகல்
எடுத்துளங் கடுத்தவர் முறைகளோ?
அமைவுரு உளத்தினால் அடுத்தவர் தலைகளை
அடியுறக் களிறிடர் கறைகளோ?
எமையுமிந் நிலத்தையும் இழிபடச் செயுவினை
இவைகொலோ? எனவுளங் கரைகுவேன்! 10

-1962



2  அடிமை வாழ்வு எத்தனை நாள் ?

இமைமூடி உறங்குகின்ற விழிமலர்க!
இளைஞர்தம் உணர்வெழுக! எழுக தோள்கள்!
சுமை சுமையாய் அற்றைநாள் சுமந்த புகழ்
நினைத்திடுக! சூடேற்றிக் கொள்க நெஞ்சு!
நமையழிக்க இற்றைநாள் வரும்பகையை
எண்ணிடுக! செந்தமிழ்த்தாய் நலம்போ மாயின்
அமைகின்ற அடிமைவாழ் வெத்தனைநாள்?
ஆர்த்திடுக, தமிழுரிமை காத்தற் கென்றே!

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/69&oldid=1424690" இலிருந்து மீள்விக்கப்பட்டது