பக்கம்:கனிச்சாறு 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


23  எழுந்தது மறவர் கூட்டம்!

உடல் நரம்பில் தமிழ்க்குருதி ஓடாதார்
ஒதுங்கிடுக; ஒருநாளில் மூவேளைக்கே
குடல் நிரப்பும் தொழிலொன்றே பெரிதென்னும்
கோழையர்கள் வழிவிடுக; மடியர்செல்க!
விடல் அரிதா அடிமைநலம் விரும்பிடுவார்
வெருண்டொதுங்கிக் கொள்க;தமிழ் மானங்காக்கும்
அடல்மறவர் வெங்களிற்றுக் கூட்டமென
அலைந்தெழுந்தார்; அவர்நடைக்குந் தடைசெய்யாமே!

-1963



24  தமிழர் விழிப்படைக!

எத்தகையார்க் குழைத்தாலும், இடுகவென
ஏந்துகையிற் சோற ளிப்பர்;
அத்தகையார் நமக்கென்றும் அரசரல்லர்!
நாமவர்க்கும் அடிமை யல்லர்!
தொத்துகையால் குரங்குக்கு நீட்டுகழி
தோழனன்று! பிறரிந் நாட்டில்
வித்துகையால் விளைவெல்லாம் அவர்க்கன்று!
விழிப்படைக தமிழர் இன்றே!

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/70&oldid=1424691" இலிருந்து மீள்விக்கப்பட்டது