பக்கம்:கனிச்சாறு 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  35


25  எழுவாய் நெஞ்சே!

இளைத்துள்ள தமிழ்நெஞ்சே! எழுவாய் நீ!
எதன் பொருட்டா யெண்ணி யெண்ணிக்
களைத்துள்ளாய் வருந்தற்க; களிப்புறவே
ஒருவழியைக் காட்டு கின்றேன்;
முளைத்துள்ள தமிழ்ப்பயிரில் மூண்டெழுந்த
களையனைத்தும் முனைந்து நீக்கி
விளைத்துள்ள பசுந்தமிழை விரிவடையச்
செய்யவினை விரும்பு வாயே! 1

அயர்வுற்ற தமிழ்நெஞ்சே! ஆர்த்தெழு,நீ!
அயர்வறுக்கும் ஆறு சொல்வேன்;
உயர்வுற்ற நறுந்தமிழர் உளச்சிறப்பில்
இழிகின்றார்; உழைப்பி லாது
மயர்வுற்ற சிறுசெயலில் மடிகின்றார்;
அன்னவர்க்கு மலைவு நீக்கிப்
பெயர்பெற்ற தமிழகத்தின் பெருமையெலாம்
உணர்வுபெறப் பேசு வாயே! 2

வருந்துகின்ற தமிழ்நெஞ்சே! வருந்தற்க;
வளப்பமுறு வழியு ரைப்பேன்;
இருந்தழிந்த சிறப்பெல்லாம் எடுத்தவர்க்கே
இயம்பிடுங்கால், இனியிந் நாட்டில்
பொருந்திவரா இழிசாதிப் புகைச்சலெல்லாம்,
சமயஞ்சேர் புரைக ளெல்லாம்
திருந்திவரா விடிலழிவு திகழுமென்று
மனங்கொளவே தெளிவிப் பாயே! 3

புகைசேர்ந்த தமிழ்நெஞ்சே! பொலிவுபெறு!
புகழ் சேர்ந்த தமிழ்நி லத்தில்
பகைசேர்ந்த தாற்சேர்ந்த பழியெல்லாம்
இழிவெல்லாம் பதைக்கக் கூறித்
தகைசேர்ந்த பண்பெல்லாம் உயர்வெல்லாம்
தமிழ் நிலத்துத் தழைக்க வாழ்த்தித்
தொகை சேர்த்த தமிழ்க்குழுவைத் திரட்டியொரு
துணையாக்கத் துடிப்பார் வாயே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/71&oldid=1424692" இலிருந்து மீள்விக்கப்பட்டது