பக்கம்:கனிச்சாறு 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

கண்ணுருட்டிப் பார்ப்பார்தம்
கால்வருடி நின்றிருப்பார்
எண்வகையாச் செம்பொருளை
எப்படித்தான் காண்பாரோ?

கோலெடுப்பார் தம்முன் குரங்காய் நடமிடுவார்,
நூலெடுத்துக் கற்றறிந்து
நோற்றுயர்வ தெப்பொழுதோ? 60

வண்டியின்மேல் போவார்க்கே வாய்பொத்திக் கைகூப்பி
மண்டியிட்டு வாழ்வார் மனந்திருந்தல் எப்பொழுதோ?

வீசுகின்ற சோற்றுக்கே வீங்கித் தவங்கிடப்பார்,
மாசகன்ற நல்லறிவால் மாண்புபெறல் எப்பொழுதோ?

நட்டுவைத்த கல்முன் நறும்படையல் வைத்தொடுங்கிக்
குட்டுவைத்துக் கொண்டழுவார்
கூன்கொள்கை மாய்ந்திடுமோ?

மக்களுக்குள் கோடிக் குலம்படைத்து மாண்பழிக்குஞ்
சிக்கல் அவிழ்ந்து சிறப்புவந்து வாய்ந்திடுமோ?

வாய்மொழியும் திக்கி வருமொழிக்கும் பண்பிழப்பார்
தாய்மொழியைப் பேணித்
தரமுயர்தல் நேர்ந்திடுமோ? 70

கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்திழக்கும் தீத்திறத்தார்
மண்ணமைக்கும் நல்லமைப்பில்
மாண்புபெறல் காண்குவமா?"

என்றே இடையிடையே எண்ணச்சோர் வுற்றாலும்
வென்ற தமிழிருக்கும் வல்லமையால் வீழோம்யாம்!

என்றேனும் ஓர்நாள் இழிவகன்ற எம்மக்கள்
மன்றேறிக் குந்தி மணித்தமிழை மேலிருத்தி
“எந்தமிழத் தாய்மாரே! தந்தையரே! காளையரே,
இந்த நொடிமுதலா எல்லாரும் ஓரினமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/88&oldid=1424745" இலிருந்து மீள்விக்கப்பட்டது