பக்கம்:கனிச்சாறு 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  57

முத்தளந்த கையில் - முடியணிந்த நின் தலையில் -
பத்தும் அளந்துதந்து பாமடுத்த நின்செவியில்-
குத்தவரும் வேலின் குறிதடுக்கும் மார்பினிலே-
தொத்தவரும் பைங்கிளிமார் தோய்ந்துறங்கும் தோளினிலே
பார்த்திருந்த நின்பகைவர் பாய்ச்சினரே கூரம்பை!
காத்திருந்த மாற்றார்க்குக் காணுவழி வேறிலையே!

கொல்லன் வடித்தீந்த அம்புக்குக் கூர்பார்க்க
வல்லனே நின்கை வடுப்படுவ தல்லாது -
காந்தள் மலர்க்கைக் கயல்விழியால் கூருகிரால்
ஏந்துகின்ற மார்பில் எடுத்தவடு வல்லாது - 40
நின்றோள் வடுப்படவும் நேர்ந்த கதையறியேன்;
அன்றோகாண் நின்பெருமை! ஆரே இனியுரைப்பார்?

பூரித்த தோள்கள் பொலிவிழந்து போயினவோ?
ஏரித் தடங்கரையை இங்குவந்து யாருடைத்தார்?
முக்கழகச் சீர்மை முழுதலரும் என்றிருந்தேன்.
முக்கழகச் சீர்மை முழுதலரும் என்றிருக்கத்
தக்கபடி வந்தான் தலையரிந்து கொண்டிருப்பான்;
ஒக்கபடி வந்தான் உடலரிந்து கொண்டிருப்பான்!

முத்தமிழ்க்குக் காப்பாக முன்னிற்பாய் என்றிருந்தேன்!
முத்தமிழ்க்குக் காப்பாக முன்னிற்பாய் என்றிருக்கப் 50
பித்தனவன் வந்தான் பிணமாக வீழ்த்திவிட்டான்!
எத்தனவன் என்றறியேன்; ஏமம் விளைத்தறியேன்!

பொய்யன்று; தூங்கும் புலியென்று நானிருந்தேன்;
கொய்யென்று நின் தலையைக் கொய்தான்; உறங்கினையே!

ஆளழகு மட்டுமில்லை; ஆணரிமா என்றிருந்தேன்!
தோளழகு மாளத் தொடுத்தகணை பாய்ச்சிவிட்டான்.

பில்குதமிழ்த் தேன்பா பிலிற்றும் புலவரொடு,
மல்குதமிழ் வேந்தன் மறைமலைகள் காத்திருந்தும்,
பல்குதமிழ் ஆய்ந்துவரும் பாவாணர் காத்திருந்தும்,
நல்குதமிழ்ப் பாவேந்தன் நாட்டுவிழி பார்த்திருந்தும், 60
ஓரா யிரமறவர் ஓச்சியவாள் வீச்சிருந்தும்,
ஆரோ வெறியன் அடிவெட்டி வீழ்த்திவிட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/93&oldid=1424751" இலிருந்து மீள்விக்கப்பட்டது