பக்கம்:கனிச்சாறு 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  75


பதவியோ தமிழர்க் கில்லை;
படையினில் சேர்ப்ப தில்லை;
முதலிட்டு வணிகஞ் செய்யும்
முதலாளிப் பேறங் கில்லை;
கதவுக்குத் தாழ்ப்பாள் போல,
களைகொத்துக் காம்பைப் போல,
உதவிடும் தமிழர்க் கங்கே
உண்மைப் பேர் கள்ளத் தோணி! 9

காடுற்ற உழைப்பால் நீண்ட
களைப்புற்ற தமிழர்க் கங்கே
வீடற்ற தெருநாய் வாழ்க்கை!
விடிவற்ற இருண்ட காட்சி!
நாடற்றும் உரிமை யற்றும்
நலமற்றும் பதவி யற்றும்
கேடுற்ற தமிழர் அங்கே
கிளையற்று வாழ்தல் கேளீர்! 10

தமிழினம் உலகை யாண்ட
தனியினம் என்றே நாமும்
அமிழ்தெனப் பேசிப் பேசி
ஆண்டாண்டா யடிமை யானோம்!
உமிழ்கின்ற எச்சில் சோற்றுக்
கோடிடும் நாய்க ளைப்போல்
தமிழினம் தமிழர் நாட்டில்
வாழ்தலைத் தவிர்ப்பார் இல்லை! 11

என்னினம் இலங்கை நாட்டில்
இடர்ப்பட்டு வாழ்தல் கேட்டால்
மின்னொன்று தலையிற் பாய்ந்து
மேனியைத் தீய்த்தாற் போல
இன்னுயிர் நடுக்கங் கொள்ளும்!
என்செய்வார் இங்கே உள்ளார்?
தன்னினும் கேடுற்றோர் யார்
என்றிந்தத் தமிழன் கேட்பான்? 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/104&oldid=1424595" இலிருந்து மீள்விக்கப்பட்டது