பக்கம்:கனிச்சாறு 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 91


உலகமென்னும் உருண்டைக்குள்
தமிழர்க் காக
உரிமையுள்ள ஒருநாடு
தோன்றல் வேண்டும்!
கலகத்தால் இனமழிந்து
சாகும் முன்னம்,
கயவரெல்லாம் தமிழ்க் குலத்தை
அழிக்கும் முன்னம்,
பலகற்ற சூழ்ச்சியினால்,
அதிகா ரத்தால்,
பைந்தமிழர் நைந்தழிந்தே
ஒழியு முன்னம்
விலகட்டும் பகை! உரிமைக்
கதிர்தோன் றட்டும்!
விடியட்டும் தமிழீழம்!
விளங்கட் டும்மே!

விடுதலைக்குத் தோள்கொடுக்கும்
இளைஞ ரெல்லாம்
வேற்றுமைகள் மறந்தொருங்கே
அணிசே ரட்டும்!
கெடுதலைக்குக் குழிவெட்டி
மண்மூ டட்டும்!
கீழறுப்பு வேலைகட்குத்
தீவைக் கட்டும்!
அடுதலையைத் தொடங்கட்டும்!
படைசூ ழட்டும்!
ஆர்ப்பரிப்பு வானத்தைக்
கிழித்தே கட்டும்!
படுதலையில் காலிடறப்
பகையோ டட்டும்!
பதவி நலம் நாடுபவர்
உளஞ்சா கட்டும்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/120&oldid=1424612" இலிருந்து மீள்விக்கப்பட்டது