பக்கம்:கனிச்சாறு 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


95 சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்!

சிங்களவக் கொடியர்
செயுந்தீங்கு போதாவென்(று)
இங்கமைதிப் படையென்றே
இந்தியப் படைதானும்
சென்று தமிழர்களைச்
சீரழிப்ப தென்னவோ?
சென்று தமிழரைச்
சீரழிப்ப தென்னவென்றால்,
என்றுந் தமிழினத்தை
ஈடேற வொட்டாமல்
நின்றென்றும் அடிமையராய்
நிலைப்படுத்தும் நோக்கமன்றோ?

ஆடவரைக் கொன்றும்
அரிவையரைக் கற்பழித்தும்
காடையர் சிங்களவர்
செய்துவந்த கயமையையே
இந்தியப் படைஞரும்
செய்கின்றார் என்றறிந்தும்
நந்தமிழ ருள், சிலரும்
நயப்படுத்தல் தாம் உண்ணும்
செஞ்சோற்றுக் கடனென்று
செப்பிடவும் வேண்டுதற்கே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/135&oldid=1424627" இலிருந்து மீள்விக்கப்பட்டது