பக்கம்:கனிச்சாறு 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  25


29  தன்னாட்சி வேண்டும்!

பெற்றுவிட வேண்டும், தமிழகம்
பெற்றுவிட வேண்டும், தன்னாட்சி
பெற்றுவிட வேண்டும்!

முற்றும் நினைத்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும்
மாற்றம் இலாதது! (பெற்று)

ஒற்றுமை ஒற்றுமை என்பதால் யார்க்கும்
உருவான பயனென்ன? யார்க்கது ஏற்கும்?
வெற்று நினைப்பினில் வாழந்திட லாமோ?
விலகுதல் பகையெனப்
பொருள் கொள்ள லாமோ? (பெற்று)

கற்றும் கல்லாதவர் போல், இந்த நாட்டில்
கணக்கிலா மதங்களும் குலங்களும் கொண்டோம்!
தொற்றும் பிணிகளைப் போல்மூடப் பழக்கம்;
தொலையாத போராட்டம்; ஓயாத தொல்லை! (பெற்று )

தில்லிக்குப் போவதும் வருவதும் ஒன்றே
தெற்கினில் உள்ள அமைச்சர்கள் வேலை!
மல்லிக்குச் சுக்கொன்று வேண்டுவ தென்றால்
மாதங்கள், ஆண்டுகள் காத்திடல் நன்றோ? (பெற்று)

வடக்கிலோ மேன்மேலும் அதிகார வீக்கம்;
வருமான வீழ்ச்சியோ தெற்கினைத் தாக்கும்!
இடக்குசெய் இந்தியும் இடைஇடைத் தொல்லை!
எத்தனை நாளைக்கோ இத்துன்ப எல்லை? (பெற்று )

நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்;
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்;
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்! (பெற்று )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/54&oldid=1424545" இலிருந்து மீள்விக்கப்பட்டது