பக்கம்:கனிச்சாறு 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


57  அடடா ! ஓ ! அடுத்தது, நம் ஆட்சி இங்கே!


இன்றில்லை, நேற்றில்லை,
ஈராயி ரத்தாண்டாய்
வடவரை,நாம்
எதிர்க்கின்றோம், எதிர்க்கின்றோமே!

ஒன்றில்லை, இரண்டில்லை;
ஒவ்வொன்றாய்ப் படிப்படியாய்
உரிமையை,நாம்
உதிர்க்கின்றோம், உதிர்க்கின்றோமே!

நன்றில்லை, தீதுமில்லை
எனவே நாம் இருப்பதுவே
நலமென்று
நாயினமாய் நலிகின்றோமே!

வென்றில்லை, தோற்றுமில்லை;
வீணுக்கு வீரரென்று
வாய்வீரம்
விளைக்கின்றோம் விளைக்கின்றோமே!

எதிரிகளைவிட, நமக்குள்
இரண்டகர்கள் மிக அதிகம்!
எனவே,நம்
எழுச்சியிலே தொய்வுண் டிங்கே!

உதிரிகளை, வஞ்சர்களை
எதிரிக்குக் குரல்கொடுத்துத்
துணைபோகும்
உலுத்தரை, நாம் ஒழித்தல் வேண்டும்!

சதிராடும் களத்தினிலே
போரெழுச்சி தோன்றாது!
கலை,காமக்
கயவரையும் சாய்த்தல் வேண்டும்!

அதிராமல் குரல் கொடுப்போம்;
அடங்காமல் ஆர்த்தெழுவோம்
அடடா, ஓ!
அடுத்தது, நம் ஆட்சி - இங்கே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/87&oldid=1424579" இலிருந்து மீள்விக்கப்பட்டது