பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 71
47
உன்னை நம்பிக் கிடக்குது நாடு!
நம்பிக் கிடக்குது நாடு - தம்பி
நம்பிக் கிடக்குது நாடு - உன்னை
நம்பிக் கிடக்குது நாடு - பெரும்
நலத்தினைச் செய்திடு வாயென நாளும்
(நம்பிக்)
கும்பிக் கிலாதொரு கூட்டம் - மேற்
கூரையில் லாமலே வாழ்வதும் எண்ணி
வெம்பிக் கிடந்திடும் நெஞ்சம் - இதை
வேரொடு சாய்த்திடப் போரிடு வாயென
(நம்பிக்)
துப்பின்றி வாழ்ந்திடு வோர்கள் - கேட்கும்
துணிவின்றி நொந்துகண் ணீர்விடு வோர்கள்
உப்பின்றிக் கூழின்றிச் சாவார் - உனை
ஒப்படைத் தங்குப் புறப்புடுவாயென
(நம்பிக்)
ஒவ்வொரு நாளும் நினைப்பாய்-நொடி
ஓய்வின்றி உடல்பொருள் ஆவியும் ஈவாய்!
கவ்விற் றடா,இருள் நாட்டை-செங்
கதிரெனத் தோன்றி ஒளிதரு வாயென
(நம்பிக்)
உன்கல்வி உன்அறி வூற்று-உன்
உழைப்பும் முயற்சியும் வாழ்க்கையும் அன்னார்
புன்னிலை மாய்த்திடல் வேண்டும்-எனும்
புத்துணர் வோடுளம் ஒத்தெழு வாயென
(நம்பிக்)