பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 91
60
ஏற்பும் தவிர்ப்பும்!
அடக்கமாயிரு; முடங்கி விடாதே!
ஆழமாய்நினை; அமைந்து விடாதே!
இடக்குகள் தவிர்; இடிந்து விடாதே!
எளிமையா யிரு; இழிவா யிராதே!
துருதுரு வென இரு; துடுக்கா யிராதே!
துள்ளித் திரிவாய்; துன்புசெய் யாதே!
எருதுபோலிரு; எக்களிப் புறாதே!
இனிமையாய்ப்பழகு; ஏமாறி விடாதே!
எல்லைப்படநில்; உரிமையிழ வாதே!
எதிர்நின்று பேசு; எதிரியா காதே!
சொல்லை அளந்து சொல்; சோர்ந்து பேசாதே!
சுறுசுறுப்பாயிரு; படபடப் புறாதே!
மகிழ்ச்சி யாயிரு; மனச்செருக் குறாதே!
மற்றவர் மதிப்பாய்; மனம் இழவாதே!
புகழ்ச்சி விரும்பு; புல்லியர் சொல்தவிர்!
போக்கினை உறுதிசெய்; புறம்போகாதே!
வினைசெய விரும்பு; வேக முறாதே!
வீம்பறை விலக்கு; வெறுப்புக் கொள்ளாதே!
நினைவது ஆய்ந்துதேர்; நிலைத்து விடாதே!
நேயரைப் பெருமை செய்; நினைவிழக் காதே!
ஒற்றுமை யாயிரு; உனையிழக் காதே!
உற்றவர்க் குதவு; உனைத்துற வாதே!
பெற்றவர் பேணு; பிழைசெய் யாதே!
பெருமை யாயிரு; பீற்றிக்கொ ளாதே!
அரசியல் உணர்ந்துகொள்; அறந்தவ றாதே!
ஆக்க வினைசெய்; இழந்து விடாதே!
வரிசை தெரிந்துசெய்; வழுக்கி விழாதே!
வரலாறு வாழ்க்கை; வறிதாய்ப் போகாதே!