பக்கம்:கனிச்சாறு 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


பாட்டெழுதிப் பொருள்திரட்டிப்
புகழைச் சேர்க்கும்
பழங்கதைகள் இனிவேண்டாம்!
இனத்தை மீட்க
வேட்டெழுப்பும் எழுத்தாலே
அடிமை கொண்ட
விலங்கொடிக்கும் பாட்டன்றோ
இன்று வேண்டும்!

ஏட்டெழுதும் இலக்கியத்தால்
அறத்தால் எல்லாம்
ஏமாறிப் போனதல்லால்
விளைவிங் கென்ன?
கூட்டுயிர்க்கும் ஏழையர்க்கு
வாழ்வ ளிக்கும்
கொள்கைப்பாட் டன்றோ,ஓர்
கோடி வேண்டும்!

-1986


77

பாய்ந்தெழுவீர் இளமையோரே !


உழுபவரும் உழைப்பவரும் ஒன்றிணைந்தால்
ஊராள்வோர் நிலையென்னாகும்?
கொழுமுனைகள் கொடுவாளாய்க் கொல்லுலைகள்
எரிதழலாய் உருமாறாவோ?
கழுவடைகள் அரசியலில்-கயமையர்கள்
கலைத்துறையில்-புகுந்ததாலே
பழுதடையும் தமிழகத்தைப் புதுப்பிக்கப்
பாய்ந்தெழுவீர் இளமையோரே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/144&oldid=1440813" இலிருந்து மீள்விக்கப்பட்டது