பக்கம்:கனிச்சாறு 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


நன்மை செய்திலோம்!
நலன்கள் விளைத்திலோம்!
நாளும் இருப்பதாய்
நினைந்து நலிகிறோம்!
புன்மைச் செயல்களே
போற்றிச் செய்கிறோம்!
‘பொக்’ கென ஒருநாள்
போயும் விடுகிறோம்!

மின்னல் வாழ்க்கையில்
மிதந்து களிப்பதா?
மேனி மினுக்கலும்
உண்ண மேய்வதும்
இன்னல் வாழ்க்கையின்
இலக்கணம் ஆகுமா?
எண்ணிப் பாருங்கள்
இளந்தலை முறையரே!

இருக்கும் மட்டிலும்
ஏற்றம் நினையுங்கள்!
இருந்து போனதை
எண்ணப் பண்ணுங்கள்!

செருக்கும் தருக்குமே
சிதைவைக் கொடுத்திடும்!
சிறப்பு வாழ்க்கையே
இறப்பை வென்றிடும்!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/148&oldid=1440818" இலிருந்து மீள்விக்கப்பட்டது